வரி பாக்கி காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் ஒரு வீடு உள்ளது. 4 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்துக்கு ஹைதராபாத் மாநகராட்சி மார்ச் 30ஆம் தேதி சீல் வைத்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தகவல்படி, ‘கதவு எண் 8-3-1099 A கொண்ட சொத்தானது ஜெயலலிதாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ், இதுதொடர்பாக ஜெயலலிதாவின் சட்டவாரிசு என்று அறிவிக்கப்பட்ட தீபக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் வரி கட்டப்படாததால் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் ஒரு தனியார் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால், இது வணிகப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டது
ஒற்றை முறை தீர்வு திட்டத்தின் கீழ் பொருந்தக்கூடிய தள்ளுபடிகளைக் கணக்கிட்ட பிறகு, மீதமுள்ள வரி நிலுவைத் தொகை ரூ. 82,91,822 ஆகும். இந்த ஒற்றை முறை தீர்வுத் திட்டம் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்பதால், அதன் பிறகு நிலுவைத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா இந்தக் கட்டிடத்தை 1967-ஆம் ஆண்டில் 50,000 ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. 2015-ஆம் ஆண்டில் இந்தச் சொத்தின் சந்தை மதிப்பு 5 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோன்று சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லமும் வரி பாக்கி பிரச்சினையில் சிக்கியுள்ளது. ரூ.20 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இந்த பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
