ஆன்மீகம் தழைக்க எளிய மக்கள் வாழ்வு மலர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்கவே! என தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற கிராமப் பூசாரிகள் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.
மாநிலம் முழுவதும் சுமார் 4,000 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன. ஆதிதிராவிடர் மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான திருப்பணி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வழிபாடு நடைபெறும் 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப் பூசாரிகள் கிராமத் தெய்வங்களுக்கு பூஜை செய்பவர்கள் மட்டுமல்ல; கிராம அமைதிக்கும் இவர்கள்தான் காவல் தெய்வங்கள் என்பதை உணர்ந்து நல்லிணக்கம், நட்புறவு, மனிதநேயம் ஆகியவற்றிற்கும் சாதி வேறுபாடுகளற்ற சமூகத்தைப் படைப்பதற்கும் “அனைவரும் அர்ச்சகராகலாம்” என்ற திட்டத்தை நம் அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
திருக்கோட்டியூர் தங்கக் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மகாத்மா காந்தி – ஜீவா சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மருது பாண்டியர்கள், குயிலிக்கு சிலை அமைத்தது மற்றும் வேலுநாச்சியார் பெயரில் மேம்பாலம் அமைத்ததையும் நினைவுகூர்ந்தார்.
ஆன்மீகம் மக்களிடையே பரவ வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்திய குன்றக்குடி அடிகளாருக்கு கலைஞர் மணிமண்டபம் கட்டியதையும், சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்ததையும் அவர் நினைவூட்டினார்.
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, நாளை பிறந்தநாள் கொண்டாடும் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டுகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். “ஆன்மீகம் தழைக்க எளிய மக்கள் வாழ்வு மலர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்கவே! கிராமப் பூசாரிகளான எங்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைக்கும் மக்கள் முதல்வர் வாழ்கவே!” என வாழ்த்தினார்.
