தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் இன்று பிப்ரவரி 9-ந் தேதி 3 மணி நேரம் மதுபான கடைகளை மூடி போராட்டம் நடத்த உள்ளனர்.
- தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
- தொகுதிப்பூதிய முறையை ஒழித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
- ஓய்வூதிய சலுகைகள் வழங்க வேண்டும்
என்பது டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக 10 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இந்தப் போராட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3 மணி நேரம் மதுபான கடைகளை மூடி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். இன்று பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மதுபான கடைகளை மூடி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.
