தமிழக அரசு அறிவித்துள்ள அரசு ஊழியர்- ஆசிரியர்களுக்கான TAPS ஓய்வூதிய திட்டம், அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முழு விவரங்கள் வெளிவந்துள்ளன
இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே
தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும்
திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம்
செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, “ எந்தப் பிரச்னையையும் திறந்த மனதோடும் நல்லுணர்வோடும் அணுகினால் ஓர் இணக்கமான தீர்வைக் காண முடியும் என்பதற்குத் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) ஒரு சிறந்த சான்று.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெரிதும் விரும்பிய கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், ஒய்வூதிய நிதியத்திற்குத் தேவையான பயனாளிகளின் 10% பங்களிப்பு — ஆகிய இரண்டு முக்கிய கருத்துக்களைக் கொண்டு தமிழ்நாடு
உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் (TAPS) வரையப்பட்டுள்ளது.
அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் அரசின் நோக்கத்தை
நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் ஓய்வூதிய நிதியத்திற்குப் பயனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்பதை ஏற்றுக் கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) விட தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) சில அம்சங்களில் கூடுதலான சலுகைகளை அளிக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
