ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகள் அடையாளம் காணப்பட்டு, எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர், இதில் பெரும்பாலானோர் குஜராத், அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களில் குடியேறியிருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தநிலையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியாக்களை நாடு கடத்த சிறப்பு அதிரடிப் படையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அவர்களை தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் வரை, தனி முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தி இந்து ஆங்கில நாளிதழிடம் கூறும்போது,
“சட்டவிரோதமாக குடியேறிவர்களை அடையாளம் காண சிறப்பு அதிரடிப் படை (STF) மற்றும் தடுப்பு மையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளோம். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்திற்குப் பிறகும் தமிழக அரசு ஏன் சிறப்புப் படையை அமைக்கவில்லை அல்லது தடுப்பு மையங்களை நிறுவவில்லை என்று கேட்டதற்கு, “இந்த விஷயம் ஒரு கொள்கை முடிவு. வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம்களை நிர்வகிப்பது வருவாய்த் துறையின் கீழ் வருவதால், இதுதொடர்பாக முடிவெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது” என்றார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் கடந்த 2022 முதல் 364 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சட்டவிரோத குடியேறிகள் அதிகளவில் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் போலியான ஆதார் அட்டைகள் மற்றும் அடையாளச் சான்றுகளைப் பெற்றுள்ளதாக தெரிகிறது.
சந்தேகிக்கப்படும் வங்காளதேசத்தினர், ரோஹிங்கியாக்களின் ஆவணங்களை சரிபார்க்குமாறு மாநில காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அவர்கள் இந்திய குடியுரிமை மற்றும் வேறு ஏதேனும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் வசிப்பதாகக் கூறினால், மாவட்ட நீதிபதிகள் மூலம் இந்த விஷயத்தைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் சந்தேகிக்கப்படும் நபர் தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்படுவார்கள்.
ஒரு மாதத்திற்குள் எந்த அறிக்கையும் பெறப்படாவிட்டால், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (Foreigners Regional Registration Officer), சந்தேகிக்கப்படும் வங்காளதேசிகள் அல்லது ரோஹிங்கியாக்களின் பயோமெட்ரிக்ஸ், முக புகைப்படங்கள் மற்றும் மக்கள்தொகை விவரங்களை வெளிநாட்டினர் அடையாள போர்ட்டலில் பதிவு செய்த பிறகு, அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். Tamil Nadu set up stf identify illegal immigrants