தமிழ்நாட்டுக்கான ரயில் திட்டங்களை தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: கற்பனைகள் ஒருபோதும் உண்மையாகாது! ஒன்றிய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, தாமதத்திற்குத் தமிழ்நாட்டின் மீதே பழிசுமத்துவது நியாயமா?
இதன் உண்மையான நிலையை விளக்கி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைப் பெரும்பாலும் கையகப்படுத்தி ஒப்படைத்துள்ள நிலையில், இரயில்வே துறையிலிருந்து நிதியும் ஒப்புதல்களும் தாமதமாக வழங்கப்படுவதாலேயே பணிகள் தாமதமடைந்துள்ளன.
எனவே, நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்கவும், நாடும் மாநிலமும் பயனடையும் வகையில் இரயில்வே உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- நிலம் கையகப்படுத்துதல் பணிகள் 94% நிறைவடைந்து, நடைபெற்று வரும் 19 இரயில்வே திட்டங்களுக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன
- நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், 931.52.96 ஹெக்டேர் நிலத்துக்கான நிதி இன்னும் வழங்கப்படவில்லை
- நிலம் கையகப்படுத்துதலும் இழப்பீடு வழங்கலும் நிறைவு பெற, நிதியை முழுமையாகவும் முன்னுரிமையுடனும் விடுவிக்க வேண்டும்
- பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழியாக) மற்றும் திண்டிவனம்-திருவண்ணாமலை அகல இரயில்பாதை திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும்
- தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய இரயில்வே திட்டங்களை அனுமதிக்க வேண்டும்
- நாட்டின் ஜி.டி.பி. மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த இரயில் இணைப்பை மேம்படுத்துவது அவசியம்
