தாம்பரம் அரசு சேவை மையத்தில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். tambaram service centre student faced sexual harrasment
சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரசு சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை மையத்தில் 128 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 13 வயது சிறுமி ஒருவர் இங்கு வந்து தங்கி படித்து வருகிறார்.
கடந்த 8ஆம் தேதி காலை தூங்கி எழுந்த பிறகு அறையில் இருந்து வெளியே வந்த சிறுமியின் முகத்தை ஒருவர் துணி வைத்து மூடி இருக்கிறார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்றிருக்கிறார். அப்போது அந்த நபரின் பிடியில் இருந்து தப்பிக்க மாணவி முயன்ற போது ஆத்திரமடைந்த அந்த நபர் மாணவியை சரமாரியாக தாக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார். அந்த சமயத்தில் மாணவி கீழே விழுந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு சிலர் ஓடி வந்திருக்கிறார்கள். இதையடுத்து அந்த நபர் மாணவியை விட்டுவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.
இந்த நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை பரிசோதித்த போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்திருக்கின்றனர். இதையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அந்த சேவை மையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த மேத்யூ என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மேத்யூவை கைது செய்து போலீசார் விசாரித்ததில், கருணை அடிப்படையில் இந்த வேலையில் அவர் சேர்ந்தது தெரியவந்தது.
அந்த அரசு சேவை மையத்தின் சுற்றுச்சுவர் உயரமாக இருந்ததாலும், அதன் மேல் கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்ததாலும் அவ்வளவு எளிதாக வெளியில் இருந்து யாரும் உள்ளே வர வாய்ப்பில்லை என்பதால் சேவை மையத்திலேயே பணியாற்றும் யாரேனும் இப்படி செய்திருக்கலாம் என்று சந்தேகித்து விசாரித்த போலீசார் மேத்யூ தான் தவறு செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்து இருக்கின்றனர்.
மாணவியிடம் மேத்யூவின் புகைப்படத்தை காட்டிய போது அவர்தான் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் மேத்யூவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு யாரிடமாவது இப்படி நடந்திருக்கிறாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது.முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது.
இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் “SIR”-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்?காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும்,மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறிய, “அரசு சேவை மையத்தில் நடந்த இந்த சம்பவம் ஏற்க முடியாத ஒன்று. அரசு சேவை மையத்தில் பெண் காவலர்களை பணியமர்த்த உள்ளோம். மாணவி தைரியத்துடன் குற்றம் செய்தவரை கைகாட்டியதால் அவரை விரைவில் கைது செய்துள்ளோம். வேறு மாணவிகளிடம் இதுபோன்று அந்த காவலாளி நடந்துள்ளாரா என்று விசாரித்தோம். ஆனால் வேறு யாரும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார். tambaram service centre student faced sexual harrasment