விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கான தணிக்கை சான்றிதழ் வழங்க கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் வரும் 19-ந் தேதி திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இத்திரைப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி மறுதணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தாவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.
இம்மேல்முறையீட்டை விசாரித்த இந்த அமர்வு, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9-ந் தேதி வெளியாகவில்லை. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் இந்த உத்தரவுக்கு எதிராக ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. மேலும் திரைப்பட தணிக்க வாரியமும் இந்த வழக்கில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது.

ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனத்தின் இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரி 19-ந் தேதி நடைபெறும் என கணினி மூலமான வழக்கு விசாரணை உத்தேசப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
