சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வலதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றுகிறவர்; பல்வேறு வழக்குகளையும் தமது சித்தாந்த அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்குகிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய கோரி போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜி.எஸ். மணி என்பவர் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஜனவரி 28-ந் தேதி விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது, நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிரான போராட்டங்கள் , அவதூறு பரப்புதல்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என விளக்கம் கேட்டனர் நீதிபதிகள்.
மேலும் பாரபட்சமாக தீர்ப்புகளை வழங்குவதால் ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றனவா? என்றும் தமிழக அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர்.
