கோவை ஒப்பணகார வீதி பகுதியில் இன்று (செப்டம்பர் 28) வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழில் நகரமான கோவையில் உள்ள டவுன்ஹால் பகுதியில் ஏராளமான ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பொருட்களை வாங்க தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தற்போது வியாபாரம் களை கட்டி உள்ளது.
இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஒப்பணக்கார வீதியில் உள்ள வணிக வளாகங்களில் ஒன்றான சிம்கோ என்ற கடையின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் பேரில் உடனடியாக அங்கு சென்ற கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்துக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. மேலும் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்து விசாரணைக்கு பின்னர் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதியை சுற்றிலும் கரும்புகை மண்டலம் சூழ்ந்ததால் அங்கு உள்ளவர்கள் அச்சமடைந்தனர்.