கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் கலைஞர் பெயரில் ஆய்வு நிதி! திராவிட இயக்க ஆய்வு மாணவர்களுக்கு நல்கை! 

Published On:

| By Minnambalam Desk

study of dravidian history at cambridge university

ராஜன் குறை  study of dravidian history at cambridge university

மிக மகிழ்ச்சியான செய்தி ஒன்று அறியக்கிடைத்தது. அது என்னவென்றால் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் திராவிட இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான நல்கையை (fellowship) வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் கருணாநிதி பெயரால் வழங்கப்படவுள்ளது. அதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர்.

ஒரு புகழ்பெற்ற பாரம்பரியமிக்க பல்கலைகழகத்தில் இவ்விதமான ஆய்விற்கான நல்கையை ஏற்படுத்துவது வரவேற்கத்தக்க முன்மாதிரியாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைகழகமும் திராவிட இயக்கம் என்ற ஆய்வுப் புலத்தின் முக்கியத்துவம் கருதி இந்த நிதியை ஏற்றிருப்பது வரவேற்கத்தக்கது. மேற்கத்திய பல்கலைகழகங்களில் இத்தகைய நல்கைகள் ஆய்வாளர்களின் சுதந்திரத்தை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. ஆனால் அவர்கள் ஆய்வுப்புலம் என்ன என்பதை மட்டுமே தீர்மானிக்கும். அதனால் ஆய்வு மாணவர்கள் பாரபட்சமின்றி திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பை, அதன் நிறை குறைகளை, பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யலாம். 

ஆய்வுப் புலத்தின் முக்கியத்துவம் study of dravidian history at cambridge university

ஒரு அரசியல் தொகுதியாக, ஓரளவு சுயாட்சி உரிமைகள் கொண்ட இந்திய ஒன்றியத்தின் அங்கமான அரசாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடியை நெருங்கிக் கொண்டுள்ளது. இது இங்கிலாந்து, ஃபிரான்சு, இத்தாலி உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமானதாகும். உலகிலுள்ள 195 நாடுகளில் பத்தொன்பது நாடுகள் மட்டுமே தமிழ்நாட்டை விட அதிக மக்கள் தொகை கொண்டவை. 

உலகின் பெரும்பாலான நாடுகளில் கடந்து முன்னூறு ஆண்டுகளில் கணிசமான சமூக மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய மக்களாட்சிக் குடியரசிற்கான கால்கோள் இடப்பட்டு, மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி உருவானதைக் காணலாம். இந்த நவீன காலம் எனப்படும் சமகால அரசியல் பொருளாதார சமூக அமைப்பினை உலகின் பாரம்பரிய மக்கள் தொகுதிகள் பலவும் தங்களுக்கேயுரிய விதத்தில் உருவாக்கிக் கொண்டன. இங்கிலாந்து மெள்ள மெள்ள மன்னரின் அதிகாரத்தைக் குறைத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை அதிகரித்து இறுதியல் மன்னரை ஒரு அலங்காரக் குறியீடாக மாற்றியது.

ஃபிரான்சு மன்னரின் தலையை கில்லட்டினில் கொய்து புரட்சிகரமாக மக்களாட்சிக் குடியரசை நிறுவியது. ரஷ்யா பொதுவுடமைக் கட்சியின் புரட்சியில் மன்னரை வீழ்த்தி, மக்களாட்சிக் குடியரசை நிறுவியது. சீனாவும் அதேபோல மன்னராட்சியை புரட்சியின் மூலம் அகற்றி, பொதுவுடமை மக்களாட்சிக் குடியரசை நிறுவியது. 

தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சமூக, அரசியல் பொருளாதார மாற்றங்கள் மிகவும் தனித்தன்மை கொண்டதாக உலக வரலாற்றின் பின்னணியில் விளங்குகிறது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், நவீனக் கல்வியும் பரவியிராத நிலையில், ஒரு வெகுஜன இயக்கம் அடித்தட்டு மக்களிடையே அவர்கள் ஆதரவைப் பெற்று உருவாகி, சம நீதி, சமூக நீதி ஆகிய குடியரசு விழுமியங்களை ஏற்று அதற்கேற்ப பொருளாதார அடித்தளத்தைக் கூடியவரை தகவமைத்து மக்களாட்சிக் குடியரசின் விழுமியங்களை நிலைநிறுத்தி வருகிறது. உலகின் தொன்மையான, பன்முகம் கொண்ட பண்பாட்டுப் பின்னணி கொண்ட தமிழ்நாட்டில் அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியினை, அடையாளத்தைப் பேணி அதனை நவீனகால விழுமியங்களுக்கேற்ப தகவமைத்து உருவாக்கிய ஒரு தனிச்சிறப்பு மிகுந்த சமூக-அரசியல் இயக்கம்தான் திராவிட இயக்கம். 

பாரபட்சமின்றி சிந்திக்கும் எவருக்கும் மானுட வரலாற்றின் ஒரு சிறப்புமிக்க அத்தியாயமே திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பு என்பதனை உணர முடியும். ஐரோப்பிய நாடுகள் போல முதலீட்டியத் திரட்சியையும். தொழிற்புரட்சியையும் முதலில் உருவாக்காமல், ஒரு விவசாய சமூகத்திலிருந்து நவீன மக்களாட்சி சமூகத்தை உருவாக்கி அதனுடன் இணைந்து முதலீட்டியத் திரட்சியையும், தொழிற்புரட்சியையும் மேற்கொண்ட ஒரு மக்கள் தொகுதி என தமிழ்நாட்டைக் கூறலாம்.

இந்த வரலாற்றை ஆராய்ந்து புரிந்து கொள்வது மக்களாட்சிக் குடியரசின் சாத்தியங்களை அறிவதற்கு இன்றியமையாததாகும்.  குறிப்பாக தனி நபரை மையப்படுத்திய சுதந்திரவாத பொருளாதரம், சமூக முழுமையை மையப்படுத்திய பொதுவுடமை அரசு மைய பொருளாதாரம் ஆகிய இரண்டு முன்மாதிரிகளுக்கு வெளியே ஒரு இட துசாரி வெகுஜனவிய (left populist) முன்மாதிரியை உருவாக்கியது திராவிட இயக்கத்தின் தனிச்சிறப்பு எனலாம். இது விரிவான ஆய்வுக்குரியது. 

திராவிட தமிழ் பண்பாட்டுச் செழுமையிலிருந்து மக்களாட்சிக் குடியரசிற்கான விழுமியங்களை உருவாக்கியது; வர்ண தர்மமென்ற ஏற்றத்தாழ்வு கொண்ட படிநிலை சமூகத்திலிருந்து, அதன் ஜாதீய விலக்கங்களிலிருந்து சமூக வாழ்வை மீட்டெடுத்து சமநீதி, சமத்துவ விழுமியங்களை பொதுமன்றத்தில் நிலைநிறுத்தியது ஆகியவற்றில் திராவிட இயக்கத்தின் சாதனைகள் தனித்துவமிக்கவை. 

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், அறிஞர் அண்ணாவின் படைப்பாளுமை, அரசியல் தத்துவத் தெளிவு, அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம், அதனை தன் தனிப்பெரும் ஆற்றலால் அரை நூற்றாண்டுக்காலம் வழி நட த்தி நவீன தமிழ்நாட்டை செதுக்கிய கலைஞர் கருணாநிதி என ஒரு பெரும் சமூக மாற்றத்தை நடத்திக் காட்டி, நவீன திராவிட தமிழ் சமூகத்தை ஒரு சுயாட்சி அரசியல் தொகுதியாக வடிவமைத்துள்ள வரலாற்றினை உலகம் அறிவது அவசியமாகும்.

இதில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர் தலைமையிலும், செல்வி ஜெயலலிதா தலைமையிலும் எப்படி பங்களித்தது, இடையீடு செய்தது என்பதும் விரிவான ஆய்வுக்குரியது. தி.மு.க-அ.இ.அ.தி.மு.க இருதுருவ அரசியல் தேர்தல் சார் மக்களாட்சி வரலாற்றில் முக்கியமான முன்மாதிரி எனலாம். அது தமிழ்நாட்டு வரலாற்றை வடிவமைத்த விதம் உலக சமூகங்களுள் தனித்துவமிக்கதாக விளங்குகிறது. 

மேலும், திராவிடவிய தத்துவத்தின் பணி அப்படி தமிழ்நாட்டு அளவில் முடிந்துவிடுவதும் அல்ல. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்திய கூட்டாட்சிக் குடியரசின் விழுமியங்களையும் அதன் முன்னணி உறுப்பாக சமத்துவம், சமநீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கி செலுத்தும் பொறுப்பும் ஆற்றலும் மிக்கதாக விளங்குகிறது. சர்வதேச வர்த்தக ஒப்பந்த த்திற்கான தோஹா பேச்சுவார்த்தைகளில் தி.மு.க தலைவர் முரசொலி மாறன் இந்தியாவின் சார்பாக வைத்த வாதங்கள் இன்றும் நினைவுகொள்ளப் படுகின்றன. அந்த வகையிலும் திராவிடவிய சிந்தனைகள் சர்வதேச பல்கலைகழங்கங்களில் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவது அவசியமாகும். 

தமிழ்நாட்டிலும் ஆய்வுகளை உட்கிரகிக்கும் ஆற்றலை வளர்த்தல் 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி, அறிவியல் தொழில்நுட்பக் கல்வி, சட்டக்கல்வி, வணிகக் கல்வி, பட்டயக் கணக்காயர் பயிற்சி ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டிய நிலை இருந்தது. ஏனெனில் பொருளாதார வளர்ச்சிக்கு இவை இன்றியமையாதவையாக இருந்தன. அதனால் சமூக அறிவியல் துறைகள், கலைத்துறைகள் ஆகியவற்றில் மக்கள் அதிக ஈடுபாடு செலுத்தவில்லை. பள்ளியிலேயே கூட கணிதம், அறிவியல் ஆகியவற்றிற்குத் தரும் முக்கியத்துவத்தை வரலாறு, புவியியல் பாடங்களுக்குத் தர மாட்டார்கள். பொது அறிவுத் தேர்வுகள், இந்திய ஆட்சிப் பணித் தேர்வு போன்றவற்றிற்குத்தான் வரலாற்றுக் கல்வி பயன்படும் என்ற நிலை உருவானது. உதாரணமாக ஒரு கணிதவியல் அல்லது புள்ளியியல் நிபுணருக்குக் கூட பல்லவர்கள் ஆண்ட காலம் எந்த நூற்றாண்டு என்று தெரியாமல் இருப்பது சகஜம். 

இருபதாம் நூற்றாண்டு இறுதிவரை இந்த நிலை நீடித்ததை ஒருவிதமான சமூகவியல் தேவை என்று புரிந்துகொண்டால்கூட, இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறு, சமூக அறிவியல் துறைகளின் புறக்கணிப்பு என்பது தீவிரமடைந்துள்ளதைக் காண முடிகிறது. பிளஸ் 2 படிப்பிலேயே வரலாற்றை விருப்பப் பாடமாக எடுக்க ஒருவர் விரும்பினால் அது பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படுவதில்லை. அதனால் தமிழ்நாட்டு கல்லூரிகளிலும் வரலாறு இளங்கலைப் படிப்பு குறைவாக இருப்பதுடன், மிகவும் பலவீனமாகவும் உள்ளது. உள்ளூர் வரலாறானாலும் சரி, உலக வரலாறானாலும் சரி கல்வியோ, ஆய்வுகளோ தமிழ்நாட்டு கல்வி அமைப்புகளில் முற்றிலும் அருகி வருகிறது. 

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த அளவு சமூக அறிவியல், கலைத்துறைகள் பலவீனமடையாமல் இருக்க முக்கியக் காரணம் இளங்கலைப் படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் முடங்காமல் பல்வேறு துறைகளிலும் தனி வகுப்புகளை எடுத்துப் படிப்பதனால்தான். இந்தியாவிலும் அந்த முறை பெயரளவில் இருக்கிறது. சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம் (Choice Based Credit System) என்பார்கள். கஃபேடிரியா மாடல் (Cafeteria Model) என்பார்கள். ஆனால் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

காரணம் வரலாறு, தத்துவம், அரசியல் கோட்பாடு போன்ற துறைகளில் நிலவும் கடுமையான தேக்கம். மேற்கத்திய அறிவுலகில் பெரும் வளர்ச்சியடைந்துள்ள சமூக அறிவியல் ஆய்வுத்துறைகள், தத்துவம், கோட்பாடு போன்ற துறைகள் தமிழ்நாட்டில் மருந்தளவுக்குக் கூட பயிற்றுவிக்கப் படுவதில்லை. இந்த துறைகளில் நடந்துள்ள புலமைப் பாய்ச்சல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படுவதில்லை, வாசிக்கப் படுவதில்லை; கற்கப்படுவதில்லை. 

அதனால் ஆங்கிலத்தில் நாங்கள் எழதிய Rule of the Commoner: DMK and the Formations of the Political, 1949-1967 போன்ற ஆய்வு நூல்கள் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி பிரஸ்ஸால் வெளியிடப்பட்டாலும், அதனை உட்செரித்து விவாதிக்கும் கல்விச்சூழல் தமிழ்நாட்டில் நிலவவில்லை. இதற்கு முக்கிய காரணம் அரசியல் த த்துவம், கோட்பாடு ஆகியவற்றில் கடந்த ஐம்பாதாண்டுகளில் மேற்குலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தமிழ்நாட்டு கல்விச்சூழலில் உள்வாங்கப்படவில்லை என்பதேயாகும். தமிழ்நாட்டு பல்கலைகழகங்களில் History, Political Science, Philosophy, Sociology உள்ளிட்ட துறைகள் மிகவும் பலவீனமாகவே உள்ளன. உலகளாவிய புலமைப் பாய்ச்சல்களுடன் முற்றிலும் தொடர்பற்ற நிலையிலேயே இந்தத் துறைகள் உள்ளன. இவை வளர்ச்சியடைந்தால்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நல்கையில் நடத்தப்படும் ஆய்வுகள் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பயன்தரும்.

சமூக நீதி இலட்சியத்தை அடைய கல்வியே வழி! 

திராவிட இயக்கத்தின் தனிச்சிறப்பு அது கல்வியையே சமூக மாற்றத்தின் கருவி எனக் கருதியதுதான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தொடர்ந்து கல்வியை வலியுறுத்தி வந்ததுடன் அதற்கான பல சிறப்பான முன்னெடுப்புகளை செய்துள்ளனர். அத்தகைய கல்விப்புல வளர்ச்சியில் இடையில் ஏற்பட்டுள்ள சமமின்மைதான் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்படும் கவனமும், சமூக அறிவியல், கலைத்துறைகளுக்கு ஏற்பட்டுள்ள பலவீனமும். 

இந்த நிலை சரிசெய்யப்பட்டு அரசியல் தத்துவமும், கோட்பாடுகளூம், சிந்தனைகளும் பரவலாகப் பயிலப்படும் சூழல் உருவாக வேண்டும். சிம்லாவில் ஒன்றிய காங்கிரஸ் அரசு உருவாக்கியது போன்ற உயர்நிலை ஆய்வு மையங்கள் (Institue of Advanced Studies) உருவாக்கப்பட வேண்டும். தமிழில் சமகால சிந்தனைகளும், கோட்பாடுகளும் மொழியாக்கம் செய்யப்பட்டு பயிலப்பட வேண்டும். இவ்வாறு செய்யும்போதுதான் திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகள் அனைவராலும் உள்வாங்கப் படும். study of dravidian history at cambridge university

யார் ஒருவரும் சாதாரணமாக 1950-ஆம் ஆண்டின் சமூக பொருளாதார நிலை பற்றிய தரவுகளையும், எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்றைய சமூக பொருளாதர நிலை குறித்த தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன, அதில் எந்த அளவு சமூகத்தின் பல்வேறு அடுக்குகளும் பங்கேற்றுள்ளன பயனடைந்துள்ளன என்பதை அறியலாம். நோபல் பரிசு பெற்ற பொருளாதார சிந்தனையாளர் அமர்த்யா சென்னும், ஜான் டிரெஸ்ஸும் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியனை பெரிதும் பாராட்டிப் புகழ்ந்துள்ளதை கவனத்தில் கொள்ளும்போது, ஏன் திராவிட இயக்கம் குறித்தும், திராவிடவிய சிந்தனை குறித்தும் உலகம் கவனம் கொள்ள வேண்டும் என்பது விளங்கும். 

அமர்த்யா சென், ஜான் டிரெஸ்

நிச்சயம் சர்வதேச அளவில் தமிழ்நாட்டு வரலாறு ஒரு முன்மாதிரியாக கவனம் பெறத்தான் போகிறது எனலாம். அதற்கான அச்சாரமே கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் பெயரிலான நல்கை. தமிழ் கூறும் நல்லுலகம் இந்த முன்னெடுப்பை வாழ்த்தி வரவேற்கக் கடமைப்பட்டுள்ளது. study of dravidian history at cambridge university

கட்டுரையாளர் குறிப்பு:  

What do Aryan political leaders desire by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com  study of dravidian history at cambridge university

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share