திமுக அமைச்சர்களுக்கு CBI, ED, IT என அழுத்தம் தருகிறார்கள் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் உத்தங்குடி கலைஞர் திடலில் இன்று (பிப்ரவரி 21) மாலை தென்மண்டல பாகமுகவர்கள் BLA2, BLC, BDA மாநாடு “ என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பெயரில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் வரும் போது அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு, சிவப்பு துண்டை சுழற்றி வரவேற்றனர்.
மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வீரம், பாசம், கோயில், சாப்பாடு என்றால் மதுரைதான். இங்கு எல்லாமே ஃபேமஸ் தான்” என்றார்.
“இனி நாம் தான்… இனி எப்பவுமே நாம் தான் என்று கூறிய அவர், “எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது தமிழ்நாட்டில் யாருடைய வாக்கும் நீக்கப்படாமல் இருக்க பம்பரமாக உழைத்த இயக்கம் நமது இயக்கம்” என்று பாராட்டினார்.
“சட்டமன்றத் தேர்தலில் 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் நமது லட்சியம். அடுத்த 2 மாதங்களுக்கு நான் உட்பட யாருக்கும் நோ ரெஸ்ட்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “திமுக போன்று அமைப்பு ரீதியான வலுவான கட்சியை இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாது. நாமெல்லாம், அண்ணா, பெரியார், கலைஞரின் இரத்தம். இங்கு நடப்பது ட்ரெய்லர் தான். அமைச்சர் நேரு இங்கு வந்திருக்கிறார். திருச்சியில் மெயின் பிக்சரை காண்பிக்க தயாராகிக்கொண்டிருக்கிறோம். மார்ச் 9 திருச்சியில் 10 லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடே பார்க்க போகிறது.
கடந்த டிசம்பர் தொடங்கி வரும் மார்ச் வரை மூன்றே மாதத்தில் கிட்டதிட்ட 20 லட்சம் பேரை நான் சந்திக்க போகிறேன். அதனால் தான் சொல்கிறேன் நாம் ரெக்கார்டு வைத்தால் அது யாராலும் உடைக்க முடியாதது போல் இருக்க வேண்டும்” என்றார் ஸ்டாலின்.
தேர்தல் பரப்புரை, கூட்டணி என தேர்தல் பணிகளில் நாம் தான் முன்னிலையில் இருக்கிறோம். எந்ததொகுதி யாருக்கு… வேட்பாளர் யார் என்பதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு அணியா… டெல்லி அணியா என மக்கள் மனதில் கேள்வி எழுப்ப வையுங்கள். தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்றால் திமுக வெல்ல வேண்டும். அதிமுகவும், பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வேண்டும். மக்களுக்காக கொடுத்தால் அது திராவிட மாடல் அரசு. மக்களிடம் இருந்து எடுத்துக் கொண்டால் அது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதை மக்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்காக குரல் கொடுக்காமல் துரோகியாக மாறிவிட்டார் என்று கூறிய அவர், ஆட்சி அல்ல, பதவிகள் அல்ல, உயிரே போனாலும் எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். என்ன வழக்குப்போடுவ போடு… நாங்கள் பார்க்காத மிசாவா… தடாவா… இந்திய அளவில் உள்ள எதிர்க்கட்சிகளிலேயே திமுகவினர் மீதுதான் அதிக அளவில் ரெய்டு நடந்தது. நம் அமைச்சர்களுக்கு அதிக அழுத்தம் தருகிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த பார்க்கின்றனர். எமெர்ஜென்சியை பார்த்தது திமுக…. CBI, ED, IT எந்த சித்து விளையாட்டுக்கும் அஞ்ச மாட்டோம். என்ன ஆனாலும் நாங்கள் எழுந்து நிற்போம்” என கூறினார்.
வரும் 27ஆம் தேதி கோவையில் மேற்கு மண்டல மாநாடு நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
