சிபிஐ மூத்த தலைவர் மறைந்த நல்லுகண்ணு உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சிபிஐ கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு இன்று மதியம் 1.55 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மாலை 5.00 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்திற்கு’ கொண்டு வரப்பட்டது.
நாளை பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அங்கேயே வைக்கப்பட்டிருக்கும் என்று சிபிஐ கட்சி அறிவித்துள்ளது. நல்லகண்ணு உடலுக்கு நாளை அரசு மரியாதை செலுத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் சிபிஐ அலுவலகத்துக்கு வந்து நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, ஆ.ராசா எம்.பி ஆகியோரும் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நடிகர் சத்யராஜ் ஆகியோரும் கட்சி அலுவலகத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருந்த போது, அமைச்சர் சேகர்பாபு மற்றும் திருமாவளவன், சீமான், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
