முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளான தேவர் ஜெயந்தி ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இன்று முத்து ராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குரு பூஜை விழா ஆகும்.
இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சென்றார்.
அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “தியாகிகளை போற்றக் கூடிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. கம்பீரமாக காட்சியளிப்பவர் தேவர் என்று அண்ணா கூறுவார். வீரராக பிறந்து, வீரராக வாழ்ந்து மறைந்தவர் தேவர் என கலைஞர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்
முத்துராம லிங்க தேவருக்காக மதுரை மாநகரில் வெண்கல சிலை அமைத்தோம். பசும்பொன் மண்ணில் நினைவு இல்லம். கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் அரசு கலை கல்லூரிகள், மதுரை ஆண்டாள்புரத்தில் முத்துராமலிங்க தேவர் பாலம், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் கல்வி அறக்கட்டளை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு, 2007ஆம் ஆண்டு தேவர் நூற்றாண்டை முன்னிட்டு திருமன்னார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டது.
இப்போது 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஏற்படுகிற கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களை மழை வெயிலில் இருந்து பாதுகாக்கவும் 1.51 கோடி ரூபாய் செலவில் முத்துராமலிங்க தேவர் அரங்கம் திறந்து வைத்தோம்.
இதுபோன்று முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய திட்டங்களை தொடர்ந்து செய்வோம்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் மீது தாக்குதல் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறோம். டெல்லிக்கு போகும்போதெல்லாம் பிரதமரிடம் வலியுறுத்துகிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தியிருக்கிறேன். இதற்கு விடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.
“2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட காவிரி குண்டாறு திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!
பிக் பாஸ் 8 : வன்மத்தை கக்கிய சவுந்தர்யா