அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தவாறே அலுவலக பணிகளை மேற்கொண்டுள்ளார். Stalin meeting with cheif secretary muruganandham
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக நேற்று (ஜூலை 21) அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (ஜூலை 22) தேனாம்பேட்டை அப்போலோவில் முதல்வருக்கு சில மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து மூன்று நாட்கள் முதல்வரை ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலக பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “
முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22.7.2025) அவர் தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 15.7.2025 தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும் முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார்.
மேலும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Stalin meeting with cheif secretary muruganandham