தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று (மார்ச் 7) அவரைச் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021 செப்டம்பர் 18ஆம் தேதி பதவி ஏற்றார். தொடர்ந்து தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, தமிழ்நாடு அல்ல தமிழகம் தான் பொருத்தமானது என கூறியது, திராவிட கொள்கைகளை விமர்சித்தது, திருவள்ளுவருக்குக் காவி உடை அணிந்த புகைப்படத்தைப் பயன்படுத்தியது என தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.
ஜூலை 2024 வாக்கில் அவரது 3 ஆண்டு காலப் பணி முடிவடைந்த நிலையிலும், ஆளுநராக தொடர்ந்து நீடித்து வந்தார்.
தற்போது மேற்கு வங்கத்துக்கு அவரை மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.
சால்வை அணிவித்தும், திருவள்ளுவர் சிலையை பரிசாக கொடுத்தும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு விடை கொடுத்தார்.
நான்கரை ஆண்டுகள் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வந்தாலும் அவர் மாநிலத்தை விட்டுச் செல்லும் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துவது ஒரு முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
