விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அதிமுக… ஸ்டாலின் விமர்சனம்!

Published On:

| By Selvam

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் போராடியபோது அந்த சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சை துரோகம் செய்தது அதிமுக என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 11) விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மனிதவளம் மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

ஸ்டாலின் பேசும்போது, Stalin criticized aiadmk betrayed farmers

“டெல்டா பாசனத்திற்கான தண்ணீரை நாளைய தினம் மேட்டூர் அணையிலிருந்து நான் திறந்து வைப்பதற்கு முன்னால், இன்று மேற்கு மண்டல வேளாண் பெருங்குடி மக்களான உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியை வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், ஈரோட்டில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காக முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த பிரமாண்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டபோது, என் மனதில் அளவில்லா மகிழ்ச்சி உண்டானது. அதற்காக, வேளாண் பெருமக்கள் தனித்தனியாக என்னுடைய ஒவ்வொருவருக்கும்
வணக்கத்தையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு உணவுப் பொருள்கள் கிடைத்து உடல் வலிமையோடு வாழ்கிறார்கள்.

“தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்க” என்று இந்த ஈரோடு மண்ணிலிருந்து ஈர உணர்வோடு நான் வாழ்த்துகிறேன்.

இந்தத் துறையை ஒரு விவசாயிக்கே உரிய அக்கறையோடும், பொறுப்போடும் நடத்திக்கொண்டு வருகிறார் யார்? வேங்கையின் மைந்தன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

இந்த கண்காட்சி கருத்தரங்கம் நடத்துவதற்கு இந்த ஈரோடு மாவட்டத்தை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளைக் கொண்ட மாவட்டம் இந்த மாவட்டம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாவட்ட மொத்த வேளாண் உற்பத்தியில் 12 ஆயிரத்து 21 கோடி ரூபாய் என்ற அளவில் மாநிலத்தில் எட்டாவது இடம். காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி என்று முக்கிய பாசன கால்வாய்கள் இருக்கிறது.

இந்தியாவின் ‘மஞ்சள் மாநகரம்” இந்த ஈரோடு. அதனால், இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்து சரியான முடிவு எடுத்திருக்கிறார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் வேலையாக வேளாண்மைத் துறை என்று சொல்லாமல், உழவர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று, ‘வேளாண்மை – உழவர் நலத்துறை’ என்று பெயரை மாற்றினோம். அந்த மாற்றத்திற்கேற்ப உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களையும் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

அதனால்தான், தமிழ்நாட்டு வரலாற்றில், முதல்முறையாக வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஆரம்பித்தோம். அந்த வரிசையில்தான் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து தகவல்களையும் நீங்கள் இங்கு தெரிந்துக்கொள்ளலாம். உழவுத் தொழிலுக்கும் வேளாண்மை சார்ந்து இருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும், நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சி வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியான பயனுள்ள நிகழ்வுகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வேளாண்மை உழவர் நலத்துறையை நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், விவசாயிகளும், பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உழவு என்பது தொழில் மட்டுமல்ல, அது நம்முடைய பண்பாடு. நிலத்தை ஐந்திணையாக பிரித்து வாழ்வியல் வகுத்த இனம் நம்முடைய தமிழினம்.

அந்த நிலத்தை எல்லா வகையிலும் நாம் வளப்படுத்தி உயர்த்த வேண்டும். வளமான நிலங்களிலும், பயிர்களுக்கு நடுவில் களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளான உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அப்படிப்பட்ட களையாக தான் கடந்த அதிமுக ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் எப்படியெல்லாம் போராடினீர்கள் என்று சிறிது நினைத்துப் பாருங்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கிறது.

கடந்த ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை அதிகமானது. உழவர்களின் உரிமையைப் பறிக்க முயன்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் வெயிலிலும், மழையிலும் விவசாயிகள் போராடி அடக்குமுறையை எதிர்கொண்டபோது, கூச்சமே இல்லாமல் அந்த சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சை துரோகம் செய்தவர்கள் அவர்கள். அதனால் தான் நீங்கள் தோற்கடித்தீர்கள்.

வேளாண் பெருங்குடி மக்களான உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அதுபோன்ற களைகள், நாட்டிலிருந்து மொத்தமாக களையப்பட வேண்டும். உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் வர இருக்கிறது. மீண்டும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையும். அதற்கு, உழவர்களைக் காக்கும் இந்த அரசுக்கு உழவர் பெருமக்கள் அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Stalin criticized aiadmk betrayed farmers

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share