நாமக்கல்லில் கொல்லி மலை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் காவல்துறை எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார் (54). கொல்லி மலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் மோகன் குமார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மோகன் தற்போது நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது எஸ்எஸ்ஐ மோகன் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.