தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் தளபதிகள் பயன்படுத்திய 20 அடி ஆழ பதுங்கு குழியை தோண்டும் பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. Prabhakaran Srilanka
முல்லைத் தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் பிரம்மாண்டமான இந்த நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை ஜூலை 10-ந் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

புதுக்குடியிருப்பு, 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமான சந்திப்புகளை மேற்கொள்வதற்காக இந்த நிலக்கீழ் பதுங்குகுழி அமைக்கப்பட்டிருந்தது.
2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர், இப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்தனர்.
போரின் குண்டுத் தாக்குதல்களால், பதுங்குகுழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை.
இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பதுங்குகுழியில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நிலக்கீழ் பதுங்கு குழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதிக்கு ஜூலை 9-ந் தேதி மாலை சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவற்றைப் பார்வையிட்டதுடன், தொடர்ந்தும் காலை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து ஜூலை 10-ந் தேதி காலை 10.30 மணியளவில் அகழ்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
