வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (SIR) எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று ‘வழக்கறிஞராக’ ஆஜராகி தமது வாதங்களை முன்வைக்க இருக்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR-க்கு எதிராக மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கின் விசாரணை இன்று பிப்ரவரி 4-ந் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கையால் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; 1.25 கோடி வாக்காளர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதற்கு எதிராக மமதா பானர்ஜி உட்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீது கடந்த 19-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மமதா பானர்ஜி, SIR தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தற்போது ஞானேஷ்குமாருக்கு எதிராக இம்பீச்மெண்ட் எனும் தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வருவதில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் இன்று SIR-க்கு எதிரான வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையின் போது தமது தரப்பு வாதங்களை முன்வைக்க மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜி தாம் ஒரு வழக்கறிஞர் என்பதால் அவரே ஆஜராக இருக்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மாலா பக்ஷி, விபு பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மமதா பானார்ஜி ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
