ஹாஃப் பாயில் முட்டை சாப்பிடக்கூடாது என்று நான் சொல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி இறுதியில் இருந்து சென்னையில் காகங்கள் இறந்து விழுவது அதிகரித்து வந்தது. அதன் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதில், பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருகக் வேண்டும் என்று கால்நடைத் துறை அறிவுறுத்தியது.
சென்னை முழுவதும் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 10) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பறவை காய்ச்சல் எதிரொலியாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பறவை காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹாஃப் பாயில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது என்று கூறியிருந்தார்.
இதனால் முட்டை ஹாஃப் பாயில் சாப்பிடக் கூடாது என்று அமைச்சர் எச்சரித்துள்ளார் என செய்திகள் பரவின.
இதுதொடர்பாக மீண்டும் விளக்கமளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் முட்டையில் செய்யக் கூடிய ஹாஃப் பாயில் சாப்பிடக் கூடாது என்று சொன்னதாக சில செய்தி கார்டுகளை பார்த்தேன்.
ஆனால், பாதியளவு வெந்த கோழி இறைச்சியை (Half boiled chicken) உண்ண வேண்டாம். நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள் என்று தான் சொன்னேன். தான் முட்டைக்கு எதிராகப் பேசுவதாக நினைத்துக்கொண்டால், நாமக்கல்லில் உள்ள முட்டை வியாபாரிகள் தனக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பார்கள்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.
அதேசமயம், இறந்த பறவைகளைக் குப்பைத் தொட்டியில் போடாமல், ஆழமாக குழி தோண்டி புதைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
