தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் எஸ். பொதுவால் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு எலம்குளம் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த இயக்குநர் சிதம்பரம், தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் தயாரிப்பாளர்கள் மீது நிதி முறைகேடு குறித்த புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், படத்தின் இயக்குநரே தற்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சிதம்பரம் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
