தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கங்கள் கொண்ட கடிதம் அளித்துள்ளதாகவும், என்னை யாரும் இயக்க முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு “பின்னால் இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்”. அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்.. நல்லதே நடக்கும் என்றார்.
இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நல்லதே நடக்கும்” தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது. அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது என விதிகள் இருக்கிறது என்றார்.
அதிமுக எந்த மாதிரியான குடும்ப கட்சியாக இருக்கின்றது என்ற கேள்விக்கு, உங்களுக்கு எல்லாம் தெரியும் , மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதை நான் சொல்ல தேவையில்லை என்றார்.
உங்களை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, நான் 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன்.
என்னை தனிபட்ட முறையில் யாரும் இயக்க முடியாது என தெரிவித்தார்.
மூத்த அரசியல்வாதியான உங்களை நீக்கி இருக்கின்றார்களே என்ற கேள்விக்கு ,
இது நீங்கள் அவரிடம் (எடப்பாடி பழனிசாமி) கேட்க வேண்டிய கேள்வி என்றார்.
மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைத்திருப்பது குறித்த கேள்விக்கு , அது அவருடைய விருப்பம் என்றார்.
அதிமுகவின் குடும்ப ஆதிக்கம் குறித்த கேள்விக்கு, கட்சியில் மகன் தலையிடுகிறார். மைத்துனன் தலையிடுகின்றார். மாவட்டத்தில், தொகுதிக்குள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறனர். கட்சியில்
மருமகன் தலையீடும் இருக்கிறது . எங்கெங்கு இயக்குகின்றனர் என்பது மீடியாவுக்கு தெரியாதது கிடையாது. அதனால் அதைப் பற்றி சொன்னேன். இது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கும் என்றார்.
அதிமுக தலைவர்கள் திமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருவது குறித்த கேள்விக்கு “அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் அதிமுக தரப்பில் இருந்து யாராவது பேச்சுவார்த்தை நடத்துகின்றனரா என கேள்விக்கு,
யார் யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும் எனக்கும் தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால் அவர்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்றார்.
பேச்சுவார்த்தை நடப்பது உண்மையா? என்ற கேள்விக்கு,”உறுதியாக” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
