திமுகவுடனான கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் மாணிக்கம் தாகூர் எம்.பி. மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கொடுத்துள்ளார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடர்ந்து பேசி வருகிறார் என்பது திமுகவினர் குற்றச்சாட்டு. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என டெல்லி காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியும் மாணிக்கம் தாகூர் அதை மீறுகிறார் என காங்கிரஸ் நிர்வாகிகளும் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கேவை நேற்று செல்வப்பெருந்தகை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கட்சி மேலிட உத்தரவை மீறி பேசி வரும் மாணிக்கம் தாகூர் எம்.பி மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிக்கையை கார்கேவிடம் செல்வப்பெருந்தகை கொடுத்தார்.
பெங்களூரில் நேற்று பிப்ரவரி 16-ந் தேதி செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறுகையில்,”தமிழகத்தில் கடந்த 2,3 நாட்களாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி கார்கேவிடம் அறிக்கையாக கொடுத்துள்ளேன். இனி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். இந்த சர்ச்சைகள் பற்றி தமக்கும் தெரிய வந்ததாக கார்கே என்னிடம் கூறினார்.. கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதே அதையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் பின்பற்றும்” என்றார்.
மாணிக்கம் தாகூர்- பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் முதல்வர் ஸ்டாலின் ஏறகனவே வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் விவகாரம் தொடர்பாக கார்கேவிடம் செல்வப்பெருந்தகை அறிக்கை அளித்துள்ளார்.
