புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போது நடைபெற்று வரும் வேட்பு மனுத் தாக்கல் ஏப்ரல் 23-ந் தேதி முடிவடைகிறது.
ஆனால் புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ், பாஜக- என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நிறைவடையவில்லை.
புதுச்சேரியில் புதியதாக தொடங்கப்பட்ட லாட்டரி மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியை பாஜக கூட்டணியில் சேர்க்க கூடாது என என்.ஆர். காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் கூட்டணிக்கு யார் தலைமை என்பது தொடங்கி தொகுதிகளை பகிர்ந்து கொள்வது வரை பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் கால அவகாசமும் முடிவடைய இருப்பதால் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வேட்பு மனுத் தாக்கல் செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று திமுகவினர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர். முதலியார்பேட்டை தொகுதியில் திமுகவின் சம்பத் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் கட்சிகளுக்கான தொகுதிகளின் அடிப்படையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவோம் என்றும் திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
