தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் 281 பள்ளிகளில் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வரும் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள மாநகராட்சி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சாரங்களில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி உபகரணங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பெற்றோர்களிடம் எடுத்துரைக்கப்படும். மேலும் குழந்தைகள் வேலைக்கு செல்லாத வகையில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்நிலையில் ஏழைக் குழந்தைகள் காலை உணவருந்தாமல் பள்ளிக்கு வருவதால் சோர்வடைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். வருகிற 13ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் இந்த காலை உணவு திட்டத்தை அரசு பள்ளிகளில் அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அம்மா உணவகம் மூலம் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் தற்போது 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவை காலை 8 மணிக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் 9 மணிக்குள் காலை உணவு அருந்திவிட்டு வகுப்புக்கு செல்ல இது வசதியாக இருக்கும்.
