கோவை மாநகராட்சி பூங்காவில் 4 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் செழிப்பான சந்தன மரங்கள் உள்ளது. குறிப்பாக மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட வன அலுவலர் குடியிருப்பு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவகம், காவல் துறை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் உள்ளது.
இந்த பகுதிகளில் இருக்கும் சந்தன மரங்களை மர்ம கும்பல் அவ்வப்போது வெட்டி கடத்தி வருகின்றனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சந்தன மரங்களை பாதுகாக்கும் நோக்கில் காவல் துறையினாலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 22) இரவில் காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி பூங்காவில் புகுந்த மர்ம கும்பல் அங்கு இருந்த 4 சந்தன மரங்களை கடத்தி உள்ளது. இதில் பாதியாக வெட்டப்பட்ட மரங்களையும் அப்பகுதியில் விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் சந்தன மரங்கள் வெட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.