ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கான முதல் ஓராண்டு தொகுப்பூதியம், ஓராண்டு பணி முடித்தவர்களுக்கான கால முறை ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு, ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 26,020 பணியாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
தற்போதைய ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்று வரும் மொத்த ஊதியத்தில் சராசரியாக 15% கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் சேர்ந்த ஓராண்டு வரை தொகுப்பூதியம் பெற்று வரும் பணியாளர்களில், விற்பனையாளர் தற்போது பெற்று வரும் ரூ.6,250-லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (கூடுதல் உயர்வு: ₹1,250).
கட்டுநர்கள் தற்போது பெற்று வரும் ரூ.5,500-லிருந்து ரூ. 6,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (கூடுதல் உயர்வு: ரூ.1,100).
ஏற்கனவே காலமுறை ஊதியத்தில் உள்ள பணியாளர்களுக்குப் புதிய ஊதிய விகிதத்தில் விற்பனையாளருகக்கு ரூ.9,990 முதல் ரூ.39,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூ.3,039 முதல் அதிகபட்சம் ரூ.7,330 வரை கூடுதல் பலன் கிடைக்கும்.
கட்டுநர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் ரூ.9,000 முதல் ரூ.35,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூ.2,706 முதல் அதிகபட்சம் ரூ.7,430 வரை கூடுதல் பலன் கிடைக்கும்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்தம் 26,020 பயனாளிகள் உள்ள நிலையில் இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு மாதந்தோறும் ரூ.9.51 கோடியும், ஆண்டிற்கு ரூ. 114.12 கோடியும் கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மார்ச் 2026 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
