தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இன்று (பிப்ரவரி 13) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான ரூ.3000 மற்றும் கோடை கால சிறப்பு நிதியாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரை முன்கூட்டியே வழங்கியுள்ளது. தேர்தலை முன்னிட்டு உரிமைத் தொகை வழங்குவதைத் முடக்க சிலர் முயற்சித்த நிலையில், முன்கூட்டியே இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தமிழக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் முதல்வரின் நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தி 2019-ல் முன்வைத்த “ந்யாய்” (Nyay – மாதம் ரூ.6,000) திட்டக் கருத்து — பெண்களுக்கு நேரடி வருமான ஆதரவு வழங்கும் பார்வை — இந்தியா செல்ல வேண்டிய திசையைக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“தமிழ்நாட்டில் அரசு செயல்படுத்தும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுவது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.
இன்று மூன்று மாதத் தொகையை முன்கூட்டியே வழங்கி, கூடுதல் ரூபாய் 2000 உதவி வழங்கியிருப்பது அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கினை உணர்த்துகிறது.
அதேபோல், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தும் கிருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்பட்டு, அவர்களின் பொருளாதார சுயநிலையை வலுப்படுத்துகிறது.
இரு மாநிலங்களும் பெண்களை முன்னுரிமையாகக் கொண்டு குடும்பங்களுக்கு , பொருளாதாரம் வலுப்படும் என்பதை நிரூபித்துள்ளன.
ராகுல் காந்தி 2019யில் முன்வைத்த “ந்யாய்” (Nyay மாதம் ரூ 6000) என்ற கருத்து — பெண்களுக்கு நேரடி வருமான ஆதரவு வழங்கும் பார்வை — இந்தியா செல்ல வேண்டிய திசையை காட்டுகிறது: மரியாதை, பாதுகாப்பு, பொருளாதார நீதி.
பெண்களை அதிகாரமளிப்பது இந்தியாவை அதிகாரமளிப்பதாகும்.
இந்த முயற்சிகள் தொடர்ந்து வலுப்பெறட்டும்.” என தெரிவித்துள்ளார்.
