சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக்காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் அதிமுகவில் சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று (செப்டம்பர் 16) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சாமானிய ஏழை, எளிய மக்களுக்காக இந்த மக்கள் இயக்கத்தை 17.10.1972 ஆம் ஆண்டில் தொடங்கினார் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு.
புரட்சித்தலைவர் மறைவிற்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா தனது அயராது உழைப்பால் இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். குறிப்பாக 234 சட்ட மன்ற தொகுதிகளில் இரட்டை இலையை நிற்க வைத்து மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக, இருபெரும் தலைவர்கள் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக, எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார். மேலும் அதிமுகவை மீட்டெடுத்து, இரட்டை இலையை மீட்டெடுத்து, இன்றைக்கு தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தில் சிக்காமல் மீட்டெடுக்க எழுச்சி பயணத்தை நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மன்னராட்சி ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராய்
களப்போராளியாய் உரிமை போராட்டத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார்.
இதுவரை 150 தொகுதிக்கு மேல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார்.
தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க, வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடியார் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இருபெரும் தலைவர்கள் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுகவின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்றைக்கு தோற்றுத்தான் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக்காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அதிமுகவில் சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது.” என தெரிவித்துள்ளார்.