விமர்சனம் : பாகுபலி THE EPIC – காவியமா? கானல் நீரா?

Published On:

| By Minnambalam Desk

ராஜ திருமகன்

2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி வெளியான பாகுபலி முதல் பாகத்தின் தயாரிப்புச் செலவு 180 கோடி. வசூல் 650 கோடி .

ADVERTISEMENT

சரியாக ஒருவருடம் ஒன்பது மாதம் பதினெட்டு நாட்கள் கழித்து , 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் வெளியான பாகுபலி இரண்டாவது பாகத்தின் தயாரிப்புச் செலவு 250 கோடி என்றார்கள். வசூல் 1810 கோடி. ஆக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தபடி மொத்த தயாரிப்புச் செலவு 430 கோடி வசூல் 2460 கோடி

இரண்டு பாகத்தின் மொத்த நீளம் 5 மணி நேரம் 27 நிமிடங்கள்.இந்த இரண்டு பாகத்தையும் ஒன்று சேர்த்து தமிழ் தெலுங்கு இரண்டுக்கும் சேர்த்து மூன்று மணி நேரம் 45 நிமிடப் படமாகக் கொடுத்தால் அதுதான் பாகுபலி The Epic.

ADVERTISEMENT

பாகுபலி படத்தின் கதை. யாருக்குத்தான் தெரியாது .எனவே அது இங்கே வேண்டாம்.

பாகுபலியில் காளகேயர்கள் என்ற ஒரு கூட்டம வருகிறது அல்லவா? அட்டைக் கறுப்பு, அழுக்கான தோற்றம் , இரக்கமற்ற மூர்க்கம் ,மண்டை ஓட்டு மாலை என்று காட்டுவார்கள் அல்லவா?

ADVERTISEMENT

ஒரு காட்சியில் மகிழ்மதி நாட்டின் எல்லைகளைக் கூறும்போது ,”மேற்கே மலபார் சமுத்திரத்தாலும் கிழக்கே உதயகிரி மலைகளாலும் வடக்கே குந்தள நதிகளாலும் தெற்கே காளகேய கிராதிகளாலும் சூழப்பட்ட தேசம்” என்பார்கள்

மேற்கே அரபிக்கடல் , கேரளா , கர்நாடகா, கிழக்கே ஒரிசா வடக்கே இமயமலை வரை இருந்ததாம் மகிழ்மதி தேசம். (அச்சச்சோ . அந்த மான் நிக்கோபார், ஆஸ்திரேலியா , மலேசியா இந்தோனேஷியா என்று ராஜராஜ சோழன் நிஜத்தில் வென்ற பகுதிகள் அப்படியே உலக உருண்டையை உருட்டி விட்டு பின்னால் போய் அமெரிக்க ஆப்பிரிக்கக் கண்டங்கள் கொஞ்சம் தம் ஆர்ட்டிக் அண்டார்டிக் கண்டங்களை எல்லாம் மகிழ்மதியில் சேர்த்து இருக்கலாமே)

சரி அவர்கள் கற்பனை அவர்கள் பாடு . நமக்கு என்ன என்று விட்டு விடலாம் . ஆனால் தெற்கே காளகேயர்கள் என்று சொல்கிறார்களே அது யாரைத் தெரியுமா ? தமிழர்களைத்தான் .

முதலில் பேச ஆரம்பித்த இனம் , உலக மொழிகள் பலவற்றுக்கும் வார்த்தைகளை வாரி வழங்கிய இனம் , சங்க காலத்திலேயே பெண்களுக்கு அரசாங்க செயல்பாடுகளிலும் கவிதை உலகிலும் சொத்துரிமையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த இனத்தைதான் காளகேயர்கள் என்கிறார் ராஜமவுலி .

இந்த வசனத்தை அப்படியே எழுதிக் கொடுத்தவரும் உலகின் மூத்த மொழி இன மக்கள் ”லல்லச்ச ப்லல்லல்ல ப்ர்ர்ர பச்ச்ச்ச களக்சச்சச்ச’ என்று பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று கற்பனை மொழியை உருவாக்கிக் கொடுத்தவரும் யார் என்று பார்த்தால் ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி என்பது இன்னொரு கொடுமை.

உண்மையில் இன்று மகிழ்மதி தேசம் என்று ராஜமவுலி கூறும் நிலப்பகுதிதான் அன்றைக்கு காளகேயர்கள் நிலமாக இருந்தது

முதல்பாக பாகுபலி வந்த போது, மறைந்த இயக்குனர் நடிகர் விசு , ” அப்படியானால் நானும் ஒரு காளகேயன் என்பதில் பெருமைப்படுகிறேன் ” என்று கூறியிருந்தார் .

தமிழ்நாட்டு மக்கள் நம்ம படத்துக்கு இவ்வளவு கோடிகளைக் கொட்டிக் கொடுத்தார்களே , அந்த நன்றிக்காவது இந்த பாகுபலி The Epic படத்தில் அந்த வசனத்தை நீக்கி இருக்கலாம் ராஜ மவுலி .மொத்த பாகுபலியில் ஒன்றே முக்கால் நேரத்தைக் குறைத்த ராஜமவுலிக்கு இந்த வசனத்தை நீக்க மட்டும் மனசு வரவில்லை .

இது மட்டுமல்ல, இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் இங்கிலாந்தின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரான சர் ஆர்தர் காட்டனிடம் , ” அந்த காட்டுமிராண்டிப் பாம்பாட்டி தேசத்தில் எதாவது உருப்படியாக இருக்கிறதா என்று பார்த்து வாருங்கள்” என்று இந்தியாவுக்கு அனுப்பியது அன்றைய பிரிட்டிஷ் அரசு . வடக்கே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்த ஆர்தர் காட்டனுக்கு மகிழ்மதி தேசம் என்று ராஜ மவுலி சொல்லும் பகுதிகள் எல்லாம் நிஜமாகவே காட்டுமிராண்டி பாம்பாட்டி தேசமாக உண்மையான காளகேயர்கள் வாழும் பிரதேசமாகவே இருந்தது .

ஆனால் இன்று காளகேயர்கள் தேசம் என்று வஞ்சக வன்ம குணத்தோடு ராஜ மவுலியும் அதற்குத் துணை போய் மதன் கார்க்கியும் சொல்லும் பகுதிக்கு வந்த போதுதான் வியப்பில் வாய் பிளந்து நின்றார் ஆர்தர் காட்டன்

காரணம் கல்லணை கட்டப்பட்ட விதம். . பின்னாளில் அந்த அணையை பலப்படுத்தியபோது , இதனால் எனக்கு ஒன்றும் பெரிய பெருமை இல்லை. அந்த அணையை கட்டிய கரிகால் சோழனின் புகழுக்கு எந்த மறைப்பும் செய்யக் கூடாது என்று பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்தவர் அவர் கல்லணைக்கு GRAND ANAICUT என்று பெயர் வைத்தார் .” GRAND NOT BY SIZE; BUT BY TECHNICAL ‘ என்றார். ‘

அப்படி ஓர் அணையை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய இனம் எவ்வளவு அறிவார்ந்த சமூகமாக இருந்திருக்கும்?

அப்படிப்பட்ட கரிகாலனின் பெயரில் கரிகால கட்டப்பா என்று கேரக்டரை வைத்து அவரின் முன்னோர்கள் மகிழ்மதி தேசத்துக்கு பரம்பரை பரம்பரையாக அடிமையாக இருக்க ஒத்துக் கொண்டவர்கள், மகிழ்மதி அரசர்களின் கால்களை தனது தலையில் வைத்துக் கொள்ள ஆசைப்பட செய்வார்கள், அந்த கண்மூடித்தனமான அடிமை குணத்தில் துரோகம் செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று காட்சி வைத்திருக்கிறார்கள் என்றால் இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது?

கரிகாலன் என்ற பெயரைக் கூட இப்போதும் எடுக்கவில்லை என்றால் பாகுபலி EPIC ஆ இல்லை PIG ஆ என்ற கேள்வி வருகிறது அல்லவா?

கரிகாலன் அப்படி ஓர் அணையை கட்டியபோது சத்ரியன் என்ற வார்த்தை இல்லை. ராஜகுருக்கள் இல்லை. அந்த வேலையை மண்ணின் மைந்தர்களான புலவர்கள் அறிஞர்கள் சான்றோர்கள் செய்தார்கள் .

அவ்வளவு ஏன்? வீரேந்திர பாகுபலி ,அமரேந்திர பாகுபலி , மகேந்திர பாகுபலி என்று பெயர்கள் இருக்கிறதே அதில் இருக்கும் இந்திரன் என்பதே கடவுளின் பெயர்தான். அவன்தான் தமிழர்கள் சொன்ன ஐவகை நிலங்களில் ஒன்றான மருத நிலத்தின் ஆதிக் கடவுள். அப்போது எல்லாம் தெலுங்கு என்று ஒரு மொழியே இல்லை என்பதை ராஜமவுலிக்கு மதன் கார்க்கி சொல்லவில்லையா?.

உண்மையில் பாகுபலி என்பதே மொத்த கதை மற்றும் காட்சிகள் பலவும் தமிழ் வரலாற்று கல்வெட்டுகள், செப்பேடுகள் ,தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் இவற்றின் முக்கிய சம்பவங்களை திருடிக் கொண்டு போய் எடுத்ததுதான் பாகுபலியே ஒரு திருட்டுப் படம்தான். .

ரம்யா கிருஷ்ணன் ஆற்றில் மூழ்க கைகளை மட்டும் மேலே உயர்த்தி குழந்தை மகேந்திர பாகுபலியைக் காப்பாற்றுவதும் படத்தில் சொல்லப்படும் குடும்ப சண்டையும் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் வரும் பகுதிகள். (பொன்னியின் செல்வன் என்ற பெயரோடு குழந்தையை ராஜ மாதா காப்பாற்றும் காட்சியை யோசித்துப் பார்த்தால் புரியும் ).

பனை மரத்தை வைத்து நெருப்புப் பந்துகள், பெரிய கற்கள் ஆகியவற்றை வீசுவது சோழர்கள் பற்றிய செப்பேடுகளில் இருப்பவை. இதை வைத்து காந்தளூர்ச் சாலை என்ற வரலாற்று நாவல் வந்திருக்கிறது. ராஜராஜ சோழனுக்கு காந்தளூர்ச் சாலை கலமறுத்து அருளியவன் என்ற பட்டமும் இருக்கிறது . ஆனால் அதே பாணியில் மாடுகளின் உடலில் தீ வைத்து எதிரிகள் பக்கம் அனுப்புவது என்பது நிஜமான காளகேயர்களின் உத்தியாக இருக்கக் கூடும். அது தமிழ் அரசர்கள் வரலாற்றில் இல்லை. குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் வீட்டு விலங்குககளைக் கொல்லாமல் போர் நடத்தியதே பழந்தமிழர் மரபு . எதிரிகளின் மாடுகளை கைப்பற்றும் ஆநிரை கவர்தல் மரபு என்றாலும் அதை செல்வமாகப் பார்த்த மரபு தமிழ் மரபு.

பதவியை காதலுக்காக விட்டுக் கொடுப்பது தமிழ் மன்னர்கள் வரலாற்றில் நிகழ்ந்து. அதன் அடிப்படையில் கண்ணதாசன் எழுதிய சேரமான் காதலி என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டது, தேவசேனையின் குந்தாளூர் ஊரின் அமைப்பில் சாண்டில்யனின் யவன ராணி, (யவனா யவனா என்று ஒரு பாட்டும் படத்தில் உண்டு) இருக்கிறது. கப்பல் மேகம் போல பாயும் விவரிப்பில் அவரது கடல் புறா நாவல் இருக்கிறது ராஜமாதா , சிவகாமி கதாபாத்திரத்தில் சங்ககால தமிழ் இலக்கியங்கள் கூறும் பெண்களின் அதிகாரம் முக்கியத்துவம் மரியாதை எல்லாம் வெளிப்படுகிறது.

மகிழ்மதி அரண்மனை செட்டுக்கு மாடலே நம்ம ராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனைதான்

இப்படி தமிழரின் வரலாற்றில், சரித்திர நாவல்களில் இருக்கும் விசயங்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல், ஒரு நன்றி கார்டு கூடப் போடாமல் திருடி, தனது கற்பனையான தெலுங்கு அரசர்களுக்கு வைத்து விட்டு , தங்கள் வரலாற்றை தமிழர்கள் மேல் சாட்டி அவர்களைக் காளகேயர்கள் என்று சொல்வதுதான் பாகுபலி மொத்தப் படத்தின் அற்பத்தனம் .

படமாக பாகுபலி The Epic எப்படி இருக்கிறது என்று பார்த்தால்,

பதவி ஏற்பு விழா போன்ற காட்சிகளின் அதீத பில்டப்புகள் குறைக்கப்பட்டுள்ளன ( மொத்தப் படமுமே பில்டப்தான் என்பது வேறு விஷயம் )

அனுஷ்கா , தமன்னா போன்றோர் சம்மந்தப்பட்ட சில பாடல்கள் குறைக்கவோ நீக்கவோ செய்யப்பட்டுள்ளன .

நீளம் குறைந்த காரணத்தால் சில இடங்களில் பின்னணிக் குரல்கள் சேர்க்கப்பட்டு உள்ளன .

ஒரு சில காட்சித் துண்டுகள் புதிதாக இருக்கின்றன.

தொழில்நுட்பத் தரம் மொத்தமாகவே மேம்படுத்தப்பட்டுள்ளது . சிறப்பு . பாராட்டுகள்.

இது போன்ற கற்பனைக் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்றாலும், ஆரம்பகாலப் பிரம்மிப்பு நீங்கி இப்போது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது , ரசிகர்கள் காதில் பூ வைத்தால் கூடப் பரவாயில்லை . ஆனால் பூமாலையே போட்டு இருந்தால் கூட சமாளிக்கலாம். ஆனால் ஒரு பூ மலையையே தூக்கி வைத்து இருப்பது தெரிகிறது .

ஒரு படத்தை அதுவும் பலமுறை பார்த்த படத்தை மீண்டும் ஒரே அடியாக மூன்று மணி நேரம் முப்பத்தைந்து நிமிடம் பார்ப்பது அலுப்பாக இருக்கிறது .

ஒருவேளை பாகுபலி முதல் இரண்டு பாகங்களை பார்க்கவே பார்க்காதவர்களும் வரலாறு குறித்த சதிகள் அறியாதவர்களும் தமிழ் சரித்திர நாவல்கள் களஞ்சியம் பற்றித் தெரியாதவர்களும் இந்த பாகுபலி The Epic பார்த்தால் அது அவர்களுக்கு ஒரு பிரம்மாத அனுபவமாக இருக்கும் . கொண்டாடித் தீர்ப்பார்கள் .

ஆனால் அப்படி யாரும் இருக்கிறார்களா என்ன?

மொத்தத்தில் பாகுபலி The Epic , பெரிதாக ஈர்க்கவில்லை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share