சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றதை வீடியோ எடுத்து ரீல்ஸாக வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக பிராட்வே பகுதியைச் சேர்ந்த பரத் என்ற இளைஞர் ஆஜராகி உள்ளார்.
அப்போது தான் குற்றவாளி கூண்டில் நிற்பதையும், பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வருவதையும் தனது நண்பர் மூலம் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரீல்ஸாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதன்படி காவல் துறை கவனத்துககும் இந்த வீடியோ சென்றது.
போலீசார் விசாரணையில் mr.super smoker boy என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளுக்கு உட்பட்ட குற்றமாக கருதப்படுகிறது.
எனவே இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர். அதன்படி பிராட்வே பகுதியைச் சேர்ந்த பரத்தை இன்று கைது செய்தனர்.
அவருக்கு வீடியோ எடுக்க உதவிய 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பரத்தை சிறையில் அடைத்து , 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர்.
போலீஸார் விசாரணையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழிப்பறி தொடர்பான வழக்கு ஒன்றில் விசாரணைக்காக கடந்த 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பரத் ஆஜராகியது தெரியவந்துள்ளது.
