“ரெட் கார்டு கொடுத்துவிட்டால்… ஓட்டுக்கூட போட கூடாதா?” – இளம் நடிகை ரவீனா கண்ணீர்!

Published On:

| By christopher

raveena daha angry on not allowed her to vote

ரெட் கார்டு பெற்றால் ஓட்டுக்கூட போட முடியாதா? என சின்னத்திரை சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் தவித்த நடிகை ரவீனா கண்கலங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி 2025-2028ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 2000 உறுப்பினர்களை கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் சிவன் ஸ்ரீனிவாசனின் வசந்தம் அணி, தினேஷின் உழைக்கும் கரங்கள் அணி மற்றும் பரத்தின் சின்னத்திரை வெற்றி அணி என 3 அணிகள் போட்டியிடுகின்றன.

ADVERTISEMENT

சென்னை விரும்பாகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பிரபல நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கர், நளினி உள்ளிட்ட பல சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகையான ரவீனா தாஹா தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அவர் கூறுகையில், ”எனக்கு ஒரு வருடத்திற்கு எந்த சீரியலிலும் நடிக்கக் கூடாது என்று ரெட் கார்டு கொடுத்துள்ளனர். எதற்காக எனக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள் என்று சரியான காரணம் தெரியவில்லை. எனக்கு ரெட் கார்ட் கொடுத்தது நியாயமாகப்படவில்லை. அந்த விவகாரம் பற்றி இப்போது பேச வேண்டாம்.

நான் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்தபோது என்னை ஓட்டு போடக்கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

ADVERTISEMENT

சீரியலில் தான் நடிக்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள், சங்கத்தில் வந்து நிற்கலாம் இதுபோன்ற யாருக்காவது ரெட் கார்ட் குறித்த பிரச்சனைகள் வந்தால் அதற்காக துணை நிற்கலாம் என்று ஒரு உறுப்பினராக இங்கு வந்தேன். ரெட் கார்ட் கொடுத்ததால் உறுப்பினராகக் கூட வாக்களிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

தயாரிப்பாளர்களுக்கு என்னால் இழப்பீடு ஏற்பட்டதால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினர். தேர்தலில் நிற்காதவர்கள் ஓட்டு போடக்கூடாதா? அந்த உரிமை கூட எனக்கு இல்லையா? என்று தான் நான் கேட்கிறேன்.

தொழில் ரீதியாக தான் என்னை தடை செய்தார்கள். ஆனால் ஓர் உறுப்பினராக ஏன் என்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. ஓட்டுரிமையை ஏன் எடுத்துக் கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்கு தடை விதித்தது யார் என்றால் பரத் மற்றும் அவர்களின் குழுவினர்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் நான் இங்கு வரும்போது என்னை கட்டிபிடித்து ‘கண்டிப்பாக ஓட்டு போட்டு விடுமா’ என்று கூறுகிறார்கள். தடை விதிப்பதற்கு காரணமாகவும் இருக்கிறார்கள் ஓட்டும் போடவும் சொல்கிறார்கள்.

எனக்கு 18 வயதை தாண்டி 3 வருடங்களாகி விட்டது. என்னால் தேர்தலில் போட்டியிடவும் முடியும், வாக்களிக்கவும் முடியும். ஆனால் என்னுடைய அடிப்படை உரிமையை பறிக்கிறார்கள். இதுதொடர்பாக எந்த அறிக்கையும் இதுவரை தரப்படவில்லை.

ஒரு பெண் தைரியமாக ஏதாவது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார் என்றால் உடனே அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து அவர்களை சில வருடங்களுக்கு தடை செய்து வைத்துவிடுகிறார்கள். என்னை தடை செய்து நான் சம்பாதிக்காமல் இருப்பது உங்களுக்கு சிறிது சந்தோஷமாக இருக்கிறது என்றால் இருந்து கொள்ளுங்கள்” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார் சின்னத்திரை நடிகை ரவீனா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share