ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையேயான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ளவில்லை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு சமீப காலங்களில் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
- 2009-14 இடையே உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு 879 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
- 2025-26 ம் ஆண்டில் இந்த தொகை சுமார் 7.5 மடங்கு உயர்ந்து 6,626 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
- ஏப்ரல் 1, 2025 வரை தமிழ்நாட்டில் 22,808 கோடி ரூபாய் மதிப்பில் 1700 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 9 புதிய வழித்தடங்கள், மூன்று பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றுவது மற்றும் மூன்று பாதைகளில் இரண்டாவது வழித்தடம் அமைத்தல் முதலியவை இதில் அடங்கும்.
- மூன்று ஆண்டுகளில், அதாவது 2022-23, 2023-24, 2024-25 மற்றும் நடப்பு நிதியாண்டு 2025-26 இல், தமிழ்நாட்டில் மொத்தம் 2,501 கி.மீ நீளத்தை உள்ளடக்கிய 29 ஆய்வுகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- 6 புதிய பாதைகள் மற்றும் 23 பாதைகளில் இரண்டாவது வழித்தடம் ஆகியவை இதில் அடங்கும்.
- 734 கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய பாதை (18 கி.மீ) அமைக்க அனுமதிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு 01.03.2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ளாததால், திட்டத்தைத் தொடங்க முடியவில்லை. மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்ற தயாராக உள்ளது, இந்த முயற்சியில் மாநில அரசின் ஆதரவும் முக்கியத்துவம் பெறுகிறது.
- ஈரோடு-சென்னை இடையேயான ரயில் வழித்தடத்தில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு இரட்டை வழித்தடம் மற்றும் பல்வழித்தடப் பணிகள் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கரூர்-சேலம் இடையே 85 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை வழிப்பாதை, ஈரோடு-கரூர் இடையே 67 கி.மீ தொலைவிற்கு இரட்டை வழிப்பாதை, ஈரோடு- ஜோலார்பேட்டை இடையே 120 கி.மீ தொலைவிற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம், ஜோலார்பேட்டை – காட்பாடி- அரக்கோணம் இடையே 145 கி.மீ தொலைவிற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- குமாரபாளையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஈரோடு ரயில் நிலையம், அருகே உள்ள பகுதிகளுக்கு போக்குவரத்து மையமாக திகழ்கிறது.
- ஈரோடு மற்றும் நாமக்கல் ஏற்கனவே கரூர் ரயில் நிலையம் மற்றும் சேலம் ரயில் நிலையம் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
