தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் 5 முனை போட்டியாக இருக்கப்போகிறது.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, என்.டி.ஏ.கூட்டணி, நாதக, தவெக என நான்குமுனை போட்டி நிலவி வந்த நிலையில், மற்றொரு கூட்டணி தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என தொண்டர் தொடங்கிய கட்சியில் கடந்த 13ஆம் தேதி இணைந்தார்.
அந்த கட்சி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவித்த சசிகலா, ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதேபோன்று பாமக நிறுவனர் ராமதாஸ், நமக்கான கூட்டணி வண்டி வந்துவிட்டது என்று கூறி வந்தாலும், அந்த வண்டி வராமலே இருந்தது. பாமக கட்சியின் பெயர், சின்னம் கேட்டு அவர் தொடர்ந்த உரிமையியல் வழக்கும் தேர்தலுக்கு பின்னர் தான் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.
இந்தசூழலில் ராமதாஸும், சசிகலாவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு நாளை வரும். தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தப்போகிறார்கள். அன்புமணி வேட்பாளர்களை நிறுத்தும் தொகுதிகளில் தீவிரமாக வேட்பாளரை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டு வருகிறார். தனது மகள் ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோரை ராமதாஸ் களமிறங்க உத்தரவிட்டிருக்கிறார் என்கிறார்கள் தைலாபுர வட்டாரத்தில்.
முன்னதாக, கடந்த மார்ச் 10ஆம் தேதி தைலாபுரம் இல்லத்துக்குச் சென்று ராமதாஸை சந்தித்து சசிகலா பேசிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
