ராமதாஸ் – சசிகலா கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் இன்று (மார்ச் 20) கையெழுத்தானது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த மார்ச் 10ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் ராமதாஸின் பாமகவும், சசிகலா இணைந்த புதிய கட்சியான அஇபுதமமுக-வும் கூட்டணி வைத்து போட்டியிடவுள்ளது என முதன் முதலில் மின்னம்பலத்தில் கூறியிருந்தோம்.
அதன்படி இன்று தைலாபுரம் இல்லத்துக்கு சென்று ராமதாஸுடன் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இனணந்து கூட்டணி அமைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்’ என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.
அதன்படி தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
