“நமக்கான வாகனம் வந்துவிட்டது” என்று பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
ஆனால் அன்புமணிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அன்புமணி அமைத்த கூட்டணி செல்லாது என்று ராமதாஸ் கூறி வருகிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ராமதாஸ் என்ன செய்ய போகிறார். யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் ராமதாஸ் தரப்பு பாமக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்தநிலையில் ராமதாஸ் இன்று (பிப்ரவரி 25) தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “ என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…?
எப்போதும் அணிவகுப்பீர்கள். எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள்.
நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை.
உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன்” என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
