திருமாவளவன் மீது எப்போதும் பாசம்.. நெகிழ்ந்த ராமதாஸ்! அழைப்பு விடுத்த விசிக!

Published On:

| By Minnambalam Desk

Ramadoss Thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது தமக்கு எப்போதும் பாசம் உண்டு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதற்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். Ramadoss Gets Emotional, Says He Always Had Affection for Thirumavalavan; VCK Extends Invitation!

The Debate ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்ததாவது: திருமாவளவன் மீது எப்போதும் பாசமாக இருப்பேன்; என்றைக்கும் பாசமாக இருப்பேன். திருமாவளவன் என் மீது பாசமாக இருந்தார்; இருக்கிறார்; இருப்பார்.

திருமாவளவன் மீது ஒரே ஒரு வருத்தம்.. அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்பதுதான். சரி.. அது அவரது தனிப்பட்ட விஷயம்.

இன்றைக்கு நான் வணங்குகிற பல அம்பேத்கர் சிலைகளை திறந்தவரே ராமதாஸ்தான் என திருமாவளவன் சொன்னது 100-க்கு 100 உண்மைதான்.

ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இறந்த போது அவரது சடலத்தை ஊரின் வழியே கொண்டு செல்லக் கூடாது என்றனர்.. அப்போது என் தோளில் சுமந்து சென்றேன். அதனால் எனக்கு திருமாவளவன் தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டத்தை மதுரை பக்கம் இருக்கிற மேலூரில் கொடுத்தார். நல்லது செய்தால் யாரும் பாராட்டத்தான் செய்வார்கள்.

என் பேச்சை அன்புமணி கேட்க வேண்டும்; நான் கலங்கக் கூடாது என்று சொன்ன திருமாவளவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். திருமாவளவன் இப்படி சொன்னது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விசிக அழைப்பு

டாக்டர் ராமதாஸின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமா எம்பி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் ரவிக்குமார் எம்பி பதிவிட்டுள்ளதாவது: திரு மருத்துவர் ஐயா அவர்கள் எமது தலைவர் திருமாவளவன் அவர்களைப் பற்றி மனம் நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளுக்கு நன்றி.

தமிழ்நாட்டில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென சனாதன சக்திகள் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டிக்கொண்டுள்ளன. சமூக நீதியைக் காப்பதற்கான தேவை 1989 ஐ விட இப்போது இரு மடங்காக உள்ளது.

மருத்துவர் ஐயா அவர்களே! சமூகநீதிக்கான போர்க் களத்தில் மீண்டும் நுழையுங்கள்! உங்களை நம்பி வந்த மக்களை சனாதனம் காவுகொள்ளாமல் காப்பாற்றுங்கள்! இவ்வாறு ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share