அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதில் அன்புமணி தான் தலைவர் என அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.
இந்த சூழலில் பாமகவின் பெயர், சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும். அன்புமணி தான் தலைவர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தன்னை பாமக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் அன்புமணி பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்து இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த மனு மீது மட்டுமே வாதங்களை முன்வைக்க அனுமதிக்க முடியும் என்று கூறிய உரிமையியல் நீதிமன்றம் வழக்கை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.
அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் கட்சியின் பொதுச் செயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதால் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை இன்று (மார்ச் 12) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
