நாளை வெளியாகவுள்ள கூலி படத்தை பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ’இப்படம் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும்’ என்று கூறியுள்ளார்.
1975 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரஜினியின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானது. அந்த வகையில், தமிழ் சினிமாவின் ’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் திரைப்பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்த பொன்விழா ஆண்டில், ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தநிலையில் திரை பயணத்தில் 50 ஆண்டுகள் கடந்ததையும், புதிய படம் வெளியாவதையும் ஒட்டி ரஜினிக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 13) தனது எக்ஸ் பகக்த்தில், “கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள்.
இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ், சத்யராஜ், லோகேஷ் கனகராஜ், அமீர்கான், அனிரூத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.