தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கேரள மாநில ஆளுநராகப் பணியாற்றி வரும் அர்லேகர், இனி தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்.
இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய ஆளுநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முன்னதாக தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று (மார்ச் 11) சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றார். ஆர்.என். ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்தே, அண்டை மாநிலமான கேரளாவின் ஆளுநருக்குத் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
