ராஜாவின் கொலையில் சோனத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், அவர் மீது குற்றம் சாட்டப்படக்கூடாது. ஆனால் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானால், அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று கூறியுள்ளார். Raja Raghuvanshi mother said, “Sonam is to be hanged, If”
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (வயது 29). இவருக்கும் சோனம் (24) என்பவருக்கும் கடந்த மே 11ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து மேகாலயாவுக்கு கடந்த 20ஆம் தேதி ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி மாயமான நிலையில், கடந்த ஜூன் இரண்டாம் தேதி ராஜாவின் சடலம் படுகாயங்களுடன் கூர்க் பள்ளத்தாக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து குற்றவாளிகளையும், சோனத்தையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் இன்று அதிகாலை சரணடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முடிவில், ”சோனம் அவரது கணவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இதற்காக கூலிப்படையை ஏவி இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது கொலையில் ஈடுபட்ட மூன்று கைது செய்யப்பட்டுள்ளனர்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், “சோனம் அவரது தந்தை நடத்திவரும் ப்ளைவுட் கடையில் வேலை செய்து வந்த ராஜ குஷ்வாலா என்பவரை காதலித்து வந்தார். சோனத்தை விட ராஜகுஷ்வலா ஐந்து வயது சிறியவர். இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்த நிலையில், சோனத்திற்கும் ராஜா ரகுவன்சிக்கும் திருமணம் நடந்துள்ளது. தனது கணவரை பிடிக்காமல் தனது கள்ளக்காதல் உடன் சேர்ந்து இந்த கொலையை நடத்த திட்டமிட்டு தேனிலவுக்கு அழைத்துச் செல்வது போல் அழைத்துச் சென்று தீர்த்து கட்டியுள்ளார்” என தெரிவிக்கின்றனர்.
எனினும் சோனம் மீதான போலீசாரின் குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினரும், உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினரும் மறுத்து வருவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
சோனமின் தந்தை தேவி சிங் கூறுகையில், ”என் மகள் அப்பாவி. என் மகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளால் தனது கணவரை கொல்ல முடியாது. அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
மேகாலயா காவல்துறை என் மகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என் மகளை குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் எந்த விசாரணையும் செய்யவில்லை. ராஜா ரகுவன்ஷியின் கொலையில் மேகாலயா காவல்துறை ஈடுபட்டிருப்பது எனக்கு 100% உறுதியாகத் தெரியும்… இந்த வழக்கில் சோனமை சிக்க வைக்க மேகாலயா காவல்துறை முயற்சிக்கிறது” எனப் பேசினார்.
அதே போன்று ராஜாவின் தாயார் உமா பேசுகையில், “இப்போது உயிரிழந்தது சோனமின் கணவர். இருவரும் அன்பாக இருந்தனர். எனவே அவரது கொலைக்கு இப்போது சோனமை குறை கூற முடியாது. முதலில் கைதான அந்த மூன்று பேரை போலீசார் விசாரிக்க வேண்டும், பின்னர் சோனமை விசாரிக்க வேண்டும்.
சோனத்திற்கு இந்த வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், அவர் மீது குற்றம் சாட்டப்படக்கூடாது. ஆனால் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானால், அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று அவர் கூறினார்.
ராஜாவின் சகோதர் விபுல் கூறுகையில், “எனக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிந்த் (உணவக உரிமையாளர்) என்பவர் பேசினார். அவர் சோனம் உத்தரபிரதேசத்தில் இருப்பதை என்னிடம் தெரிவித்தார். அதனை நான் உத்தரபிரதேச காவல்துறையைத் தொடர்பு கொண்டு கூறிய பிறகு, சோனமை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவள் சரணடையவில்லை. சோனம் இதை ஒப்புக்கொள்ளும் வரை, அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். ராஜா மற்றும் சோனம் இருவருமே தங்கள் திருமணத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர். இருவரும் சண்டையிடுவதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை” எனத் தெரிவித்தார்.
ராஜாவின் மற்றொரு சகோதரர் சச்சின் ரகுவன்ஷி கூறுகையில், ”என்ன நடந்தது என்பதை சோனம் கூறுவார். கொலையில் அவர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோருவோம்” என்று கூறினார்.
இதற்கிடையே இருவீட்டாரும் ராஜாவின் கொலையில் நீதி வேண்டி சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) விசாரணையை கோரி வருகின்றனர்.