மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வாக்கு திருட்டு விவகாரத்தில் முன்வைக்கப் போகும் புதிய குற்றச்சாட்டுகள் என்னவாக இருக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வாக்கு திருட்டு எப்படி நடைபெற்றுள்ளது என்பது தொடர்பாக கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி விரிவாக விளக்கி இருந்தார். வாக்கு திருட்டு ஆதாரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்தே எடுத்து வெளியிட்டிருந்தார் ராகுல் காந்தி.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டுக்கு எதிராக பிரசார பயணமும் மேற்கொண்டார் ராகுல் காந்தி. இந்த பேரணியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இதனிடையே பீகாரில் நடைபெற்ற தமது வாக்குரிமை யாத்திரையின் நிறைவு பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “வாக்கு திருட்டு தொடர்பாக முன்னர் நான் வீசியது அணு குண்டுதான்.. இனி இருக்கும் ஆதாரங்களை வீசினால் அது ஹைட்ரஜன் குண்டுகளாக இருக்கும்” என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று (செப்டம்பர் 18) ராகுல் காந்தி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி, எந்த ஆதாரங்களை வெளியிடுவாரோ? என்ற பீதியில் உள்ளது பாஜக.