ADVERTISEMENT

தற்கொலையின் தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது – கோவையில் ஆர்.என்.ரவி பேச்சு

Published On:

| By Pandeeswari Gurusamy

இந்தியாவில் தற்கொலையின் தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் அரசு உதவி பெறும் கல்லூரியில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி நடத்தும் ‘சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த மாநாட்டின் துவக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது , உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும் சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும் போது நாகரீகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது என்றார்.

சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்த போதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன என்றார்.

ADVERTISEMENT

இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன. இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது இன்று பாரதம் மட்டும் இல்லாமல் உலகத்திற்கே அந்த கருத்துக்கள் தேவைப்படுகின்றன.

இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும், உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது என்றும் கூறினார். மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

ADVERTISEMENT

மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும் தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாச்சாரத்தையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது என்றார். நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது.

ஆரியம் திராவிடம் என பிரிக்க நினைக்கிறார்கள். ஆனால் பொய் உள்ளதால் அவர்கள் தோற்று போவார்கள். சரஸ்வதி நதி நாகரீகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம்” என தெரிவித்தார்.

முன்னதாக ஆளுநர் நிகழ்ச்சிக்கு ஐயப்பசாமிக்கு மாலை அணிந்து கருப்புத்துண்டு போட்டு வந்தவர்களின் துண்டுகளும் வாங்கி வைக்கப்பட்ட பின்னரே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share