புதுச்சேரி காங்கிரஸை எதிர்த்து விசிக போட்டி? வேட்பாளரை அறிவித்த திருமா

Published On:

| By Kavi

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திருமாவளவன் அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து ‘உழவர்கரை தொகுதியை’ திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. இந்த தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் சிவசங்கர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

ADVERTISEMENT

இந்த உழவர்கரை  தொகுதி உட்பட 5 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், அதை திரும்ப பெற மறுத்து வருகின்றனர். இது ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உழவர்கரை, நெட்டப்பாக்கம்,  ஊசுடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

அந்த அறிவிப்பில் ,  ”உழவர்கரை  தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரைத் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அந்தத் தொகுதி விசிகவுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அவரை வாபஸ் பெற வைக்காமல் புதுவை காங்கிரஸ் மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உண்டா இல்லையா என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00மணியோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. எனவே, வேறு வழியின்றி விசிக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை அறிவிக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்துவரும் பாஜக கூட்டணியை வீழ்த்தி மீண்டும் சமூக நல்லிணக்கமும், வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட ஆட்சியைப் புதுச்சேரியில் அமைத்திட மதச்சார்பற்ற உணர்வுகொண்ட புதுச்சேரி மக்கள் விசிக வேட்பாளர்களுக்குப் பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேட்பாளர் பட்டியல்:

ஊசுடு – பெ. அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன்

நெட்டப்பாக்கம்  – ப. அமுதவன்

உழவர்கரை – செல்வ.புஷ்பலதா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share