தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’… இனி இதெல்லாம் கட்டாயம்! பள்ளிக் கல்வித்துறையின் ‘கிடுக்கிப்பிடி’ உத்தரவு!

Published On:

| By Santhosh Raj Saravanan

Private schools administration guidelines

“லட்சக்கணக்கில் டொனேஷன், டியூஷன் பீஸ்னு கட்டுறோம்… ஆனா ஸ்கூல்ல நம்ம பிள்ளைங்களுக்குப் பாதுகாப்பு இருக்கா?” – இதுதான் இன்று பெரும்பாலான பெற்றோர்களின் ‘மைண்ட் வாய்ஸ்’ ஆக இருக்கிறது. சமீபகாலமாகத் தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளில் நடந்த பாலியல் சீண்டல்கள் மற்றும் விபத்துக்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்தச் சூழலில்தான், தனியார் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் மாணவர் பாதுகாப்பு குறித்து ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது. “இனி இஷ்டத்துக்கு ஸ்கூல் நடத்த முடியாது” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது அரசு.

ADVERTISEMENT

முக்கிய உத்தரவுகள் என்ன?

தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், பள்ளிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன:

ADVERTISEMENT
  • சிசிடிவி கண்காணிப்பு: பள்ளி வளாகம், நுழைவு வாயில், விளையாட்டு மைதானம் மற்றும் பேருந்து நிறுத்துமிடங்களில் சிசிடிவி கேமராக்கள் (CCTV) பொருத்தப்படுவது கட்டாயம். அவை இயங்குகிறதா என்பதைத் தினமும் உறுதி செய்ய வேண்டும்.
  • புகார் பெட்டி: மாணவர்கள் தங்கள் குறைகளைத் தயக்கமின்றித் தெரிவிக்க, பள்ளி வளாகத்தில் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் ‘புகார் பெட்டி’ (Complaint Box) வைக்க வேண்டும்.
  • பாதுகாப்பு கமிட்டி: பாலியல் தொல்லைகளிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க, ஒவ்வொரு பள்ளியிலும் ‘உள்நோக்குக் குழு’ மற்றும் மாணவர் பாதுகாப்புக் ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும். போக்ஸோ (POCSO) சட்டம் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
  • பின்னணி ஆய்வு: பள்ளி வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாலவர்கள் ஆகியோரை நியமிக்கும்போது, காவல்துறை மூலம் அவர்களின் பின்னணியைச் சரிபார்ப்பது (Police Verification) அவசியம்.

நிர்வாகத்திற்கு எச்சரிக்கை:

மாணவர் பாதுகாப்பைத் தாண்டி, நிர்வாக ரீதியாகவும் சில கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
  • அங்கீகாரம் (Recognition): பள்ளியின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
  • கட்டணம்: அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது. கட்டண விவரங்களைப் பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
  • கட்டிட உறுதித்தன்மை: பள்ளி கட்டிடங்களுக்கான உறுதித்தன்மைச் சான்றிதழ் (Stability Certificate), தீயணைப்புத் துறை சான்றிதழ் ஆகியவை அப்டேட்டில் இருக்க வேண்டும்.

பெற்றோர்களே உஷார்:

உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இந்த வசதிகள் எல்லாம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். “விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அரசு உத்தரவு போடுவதோடு நின்றுவிடாமல், அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளுக்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ அடித்து ஆய்வு செய்தால்தான் இந்த விதிமுறைகள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறைக்கு வரும். பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசமே கூடாது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share