தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளரின் தாய் அம்சவேணி. அவருக்கு வயது 83. வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (அக்டோபர் 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து அவரது உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.நாளை பிற்பகல் 1 மணி அளவில் அவரது உடல் ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு பிரேமலதா, ராதா ராமச்சந்திரன் என்ற மகள்களும், எல்.கே.சுதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
முதல்வர் இரங்கல்
இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில், “தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.,வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.