சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே மாதம் 15-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ், தேனியை சேர்ந்த விஜயா ஸ்ரீ ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை வனராஜா திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால், இருவரும் மேஜர் என்பதல் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. poovai jagan moorthy adgp jayaram arrest

இந்தநிலையில், இளைஞர் தனுஷின் சகோதரர் இந்திரசந்த் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது புகார் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியது.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“தனது மகள் காதல் திருமணம் செய்துவிட்டார் என்ற விரக்தியில் இருந்த வனராஜா தேனி மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் மணிகண்டனிடம் ‘எப்படியாவது மகளை மீட்டுவிட வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து மணிகண்டன், கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரியை தொடர்புகொண்டு பேசி வனராஜாவுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக, பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏடிஜிபி ஜெயராமிடமும் மகேஸ்வரி கைப்பேசியில் பேசினார். பின்னர் மகேஸ்வரி, மணிகண்டன், வனராஜா ஆகிய மூவரும் ஜெகன் மூர்த்தியை நேரில் சென்று சந்தித்தனர்.
அப்போது ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபியிடம் தொலைபேசியில் பேசினார். அதற்கு ஏடிஜிபி, ‘நமக்கு வேண்டப்பட்டவங்க தான். கொஞ்சம் உதவி செய்யுங்க’ என்றிருக்கிறார்.
இதனையடுத்து பூவை ஜெகன் மூர்த்தியின் அறிவுறுத்தலின் படி, ஜூன் 6-ஆம் தேதி மதியம் 12 மணிவாக்கில் TN 06 G 0606 என்ற எண் கொண்ட போலீஸ் வாகனத்தில் மகேஸ்வரி, வனராஜ், மணிகண்டன், மனவூர் மகா ஆகியோர் இளைஞர் தனுஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு தனுஷின் அம்மா லெட்சுமி மற்றும் அவரது தம்பி இந்திரசந்த் ஆகியோர் மட்டும் தான் இருந்தனர். காதல் ஜோடி வீட்டில் இல்லை.

இதனையடுத்து இந்திரசந்தை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். பின்னர் மூன்று மணி நேரத்திற்கு பிறகு பிற்பகல் 3 மணிவாக்கில் பேரம்பாக்கம் பகுதியில் இந்திரசந்தை இறக்கிவிட்டு சென்றனர்.
மகன் கடத்தப்பட்டவுடன் காவல் உதவி எண் 100-க்கு லெட்சுமி போன் செய்துவிட்டார். உடனடியாக அவரது வீட்டிற்கு போலீஸ் வந்துவிட்டனர். பின்னர் தனது மகன் கடத்தப்பட்ட விவகாரத்தை லெட்சுமி காவல்துறையிடம் சொன்னார்.
காவல்துறை விசாரணையில் இறங்கியபோது, கடத்தப்பட்ட போலீஸ் வாகனத்தை மகேஸ்வரி தான் பல நாட்களாக பயன்படுத்தி வருவது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை மிகவும் சஸ்பென்சாக போலீசார் விசாரித்தனர்.
இதனையடுத்து, மகேஸ்வரி, வனராஜா, மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் தந்தை வனராஜா விசாரணை அதிகாரியிடம் சொன்ன வாக்குமூலத்தில், ‘எனது மகளை மிகவும் செல்லமாக வளர்த்தேன். யாரென்று தெரியாத ஒருவனை இன்ஸ்டாகிராமில் காதலித்து விட்டார். அதனால், மகளின் வாழ்க்கை பாழாகிவிடுமோ என்று பயந்துபோய் உறவினர் மணிகண்டனிடம் தகவல் சொன்னேன். மணிகண்டன் தான் போலீஸ் அதிகாரிகளை தெரிந்த மகேஸ்வரியை அறிமுகப்படுத்தினார்.
மகேஸ்வரியை பார்த்தவுடன் தான் மகளை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை கிடைத்தது. அவர் தான் எங்களை பூவை ஜெகன் மூர்த்தியிடம் அழைத்து சென்றார். அவர் தான் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினார்’ என்றார்.
இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து மகேஸ்வரியின் போன் கால் டீட்டெய்ல்ஸ் எடுத்தனர். அதில், ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் மகேஸ்வரி மூவரும் பேசியிருப்பது தெரியவந்தது.
மகேஸ்வரியிடம் விசாரணை அதிகாரி ‘போலீஸ் கார் உங்களிடம் எப்படி வந்தது?’ என்று விசாரித்தனர். அதற்கு, ‘ஏடிஜிபி ஜெயராம் எனக்கு உறவினர். அதனால் எனக்கு அந்த காரை கொடுத்தார்’ என்று மகேஸ்வரி சொன்னார்.

‘எந்த முறையில் உறவுக்காரர்?’ என்று கேட்டபோது, ‘உறவுக்காரர் அல்ல, நண்பர்’ என்றார். ‘எதற்காக அந்த பையனை கடத்தினீர்கள்?’ என்று கேட்டபோது, ‘நான் கடத்தவில்லை’ என்றார். கடைசியில் ‘நான் தான் சிறுவனை கடத்தினேன்’ என்று ஒப்புக்கொண்டார்.
மகேஷ்வரி, வனராஜா ஆகியோரின் வாக்குமூலத்தை வைத்து திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி ஜூன் 14 அன்று சென்னை பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு விசாரிக்க சென்றனர். அப்போது போலீசை ஊருக்குள் வரவிடாமல் புரட்சி பாரதம் கட்சியினரும் ஊர் மக்களும் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு போலீஸ் சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
இந்தநிலையில், ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் நேரில் ஆஜரானார்கள்.
இந்தநிலையில், பூவை ஜெகன் மூர்த்தியை காவல்துறை விசாரணைக்கு செல்லவும், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.