அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த சூழலில் நேற்று அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாகவும், பொங்கல் போனஸ் அறிவிப்பது தொடர்பாகவும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ. வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் (இன்று – ஜனவரி 1)அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை கொண்டாடி மகிழ 2024-2025ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள்.
இந்த உத்தரவின்படி,
1. ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
2. தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்
3. “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
