இணைப்பு கல்லூரிகளுக்கு கடும் எச்சரிக்கை… விதிகளை மீறினால் அங்கீகாரம் ரத்து: புதுச்சேரி பல்கலை உத்தரவு

Published On:

| By Santhosh Raj Saravanan

pondicherry university warning affiliated colleges

புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் (Pondicherry University) இணைந்துள்ள கல்லூரிகள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் போது விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறினால் அந்த கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பல்கலைக்கழக ஆய்வுக் குழுக்கள் இணைப்பு கல்லூரிகளில் (Affiliated Colleges) ஆய்வு மேற்கொண்டபோது, பல கல்லூரிகளில் தகுதியான முதல்வர்கள், பேராசிரியர்கள், நூலகர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது மாணவர்களின் கல்வித் தரத்தை (Educational Quality) பாதிக்கக்கூடும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்

பல்கலைக்கழக ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் சில முக்கிய குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாமை
  • முதல்வர் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் பற்றாக்குறை
  • நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நியமனம் செய்யப்படாதது

இந்த குறைபாடுகள் குறித்து கல்லூரிகளுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பி திருத்தம் செய்ய வாய்ப்பும் அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் பல கல்லூரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பல்கலை பிரதிநிதி கட்டாயம்

புதிய உத்தரவின் படி, பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் நியமனத்தின் போது பல்கலைக்கழகம் நியமிக்கும் பிரதிநிதி தேர்வு குழுவில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதிநிதி இல்லாமல் நடத்தப்படும் எந்த நியமனத்தையும் பல்கலைக்கழகம் அங்கீகரிக்காது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தகுதி விதிமுறைகள்

பேராசிரியர்கள் நியமனத்தில் தேசிய கல்வி அமைப்புகளின் விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி:

  • யு.ஜி.சி
  • ஏ.ஐ.சி.டி.இ
  • என்.சி.டி.இ

போன்ற அமைப்புகளின் விதிகளின்படி பி.எச்டி அல்லது நெட் தகுதி கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காலியிடங்கள் நிரப்ப காலக்கெடு

புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே கல்லூரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

  • புதிய கல்வியாண்டுக்கு முன் : மே அல்லது ஜூன் மாதத்திற்குள்
  • இடைப்பட்ட காலியிடங்கள் : டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள்

மேலும், ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய விகிதப்படி முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றி பணியாளர் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், விதிகளை மீறும் கல்லூரிகளுக்கு பல்கலை இணைப்பு மற்றும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படாது என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share